"ஓ இதுதான் செயினா!" 4 சவரன் செயினை ஸ்வாகா செய்த வடமாநில இளைஞர்! 3 நாள் காத்திருந்து எடுத்த போலீஸ்
தங்க நகையை வாயில் போட்டு விழுங்கிய திருடனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி: வடிவேலு படப் பாணியில் வயிற்றையே ஸ்டோர் ரூமாக பயன்படுத்தித் திருடிய நபரைப் புதுச்சேரி போலீசார் கைது செய்தனர்... இந்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
திருடர்களுக்கு இந்த நவீனக் காலத்தில் டெக்னாலஜி தான் பெரிய சவாலாக இருக்கிறது.. ஆனாலும், அந்த டெக்னாலஜிக்கே சவால் விடும் வகையிலான திருட்டுகளை அரங்கேற்றி வருகின்றனர்.
ஒவ்வொரு முறையும் யாரிடமும் சிக்கிக் கொள்ளாமல் இருக்க வினோதமான முறையில் இவர்கள் திருட முயல்கின்றனர். இருப்பினும், சில நேரங்களில் அது மோசமான ஃபெய்லியரிலேயே சென்று முடிந்துவிடும்..

வடிவேலு
அப்படியொரு சம்பவம் தான் புதுச்சேரியில் நடந்துள்ளது. அதற்கு முன்பு ஒரு சின்ன ரிவைண்ட். அருண் விஜய், வடிவேலு நடிப்பில் கடந்த 2007இல் வெளியான படம் தவம்.. இந்தப் படத்தில் இடம் பெற்றிருந்த வடிவேலுவின் டிராக் காமெடி செம ஹிட்... இந்தப் படத்தைப் பார்க்காத பலரும் கூட நிச்சயம் இந்த காமெடியை பார்த்திருப்பார்கள். அதாவது அருண் விஜயும் வடிவேலும் பஸ் ஸ்டாப் ஒன்றில் நின்று கொண்டிருப்பார்கள்.

புதுச்சேரி
அப்போது அருண் விஜய் கையில் இருந்த நகை திடீரென மாயமாகிவிடும்.. அங்கு அப்போது அருகில் வடிவேலு மட்டுமே இருப்பார்.. அவரிடம் கேட்கும் போது.. முதலில் பந்தாவாக தன்னை பார்த்தால் திருடன் போலவா இருக்கிறது என்று கேட்பார்.. இருப்பினும், சந்தேகப்பட்டு அருண் விஜய் ஒரு குத்துவிட.. வடிவேலு வயிற்றில் இருந்து ஒரு சின்ன நகைக் கடையே வரும். அப்படியொரு சம்பவம் தான் புதுச்சேரியில் நடந்துள்ளது.

வட மாநில இளைஞர்
புதுச்சேரியில் முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலபதி... நெல்லுமண்டி சந்தில் நகைக்கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். பிப்.3ஆம் தேதி வடமாநில இளைஞர் ஒருவர் இவது கடைக்கு நகை வாங்க வந்துள்ளார். 25 வயது மதிக்கத்தக்க அந்த இளைஞர் தங்கச் சங்கிலி வாங்க வேண்டும் என்று கேட்டுள்ளார். அங்கிருந்த ஊழியர்களும் பல லைப் தங்க நகைகளைக் காட்டியுள்ளனர். ஒவ்வொன்றையும் எடுத்து கழுத்தில் போட்டுப் பார்த்த அந்த நபர்.. எல்லா செயினையும் பிடிக்கவில்லை என்றே குறிப்பிட்டுள்ளார்..

விழுங்கிய இளைஞர்
அப்போது திடீரென 4 சவரன் தங்க செயினை வாயில் போட்டு விழுங்கியுள்ளார். ஆனால், அதை அங்கிருந்த ஊழியர்கள் எப்படியோ பார்த்துவிட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், இளைஞரை தலைகீழாகக் கூட குலுக்கி பார்த்துவிட்டனர்.. இருந்த போதிலும், செயின் வெளியே வரவே இல்லை. இதையடுத்து இது தொடர்பாகப் புகார் அளித்த நகைக் கடை உரிமையாளர், பெரிய கடை போலீஸ் நிலையத்தில் அந்த வடமாநில இளைஞரை ஒப்படைத்தனர்.

மது குடிக்க
அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சில ஷாக் தகவல்கள் தெரிய வந்துள்ளது. அந்த வடமாநில இளைஞர், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ராஜசேகர் சவுத் என்பது தெரியவந்தது. இவர் அங்குக் கூலி தொழில்களைச் செய்து வந்துள்ளார். புதுச்சேரிக்கு இவர் சுற்றுலா வந்த நிலையில், பணம் அனைத்தும் செலவாகியுள்ளது. பணம் அனைத்தும் செலவாகிவிட்ட நிலையில், மது குடிக்க வேண்டும் என்பதால் நகைக்கடையில் இப்படி நூதன முறையில் நகையைத் திருடி முயன்றுள்ளார்..

கைது
இதையடுத்து நகையை மீட்க போலீசார் என்ன செய்யலாம் என்று யோசித்துள்ளனர். நகைத் தானாக வந்துவிடும் என்றே போலீசார் நினைத்துள்ளனர். இருப்பினும், 3 நாட்கள் அது வெளியே வரவே இல்லை. இதையடுத்து வேறு வழியில்லாமல் எனிமா கொடுத்து நகையை மீட்டுள்ளனர்.. சிகிச்சை முடிந்த பிறகு நேரடியாக மருத்துவமனையில் இருந்து நேரடியாக நீதிமன்றத்திற்கு அந்த நபரை அழைத்துச் சென்ற போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications