எப்பப் பார்த்தாலும் குடி.. சண்டை.. வெறுத்துப் போய் மனைவியுடன் கணவர் தற்கொலை.. 8 மாத குழந்தை தவிப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் குடும்ப தகராறில் 8 மாத குழந்தையை தவிக்க விட்டு கணவன், மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி அருகே நெட்டப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் (33). இவரது மனைவி ராஜாமணி (24). இவர்களுக்கு 8 மாதத்தில் அபினேஷ்வர் என்ற ஒரு ஆண் குழந்தை உள்ளது. சரவணன் நெட்டப்பாக்கத்தில் உள்ள சிலிண்டர் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
இதற்கிடையே சரவணன் அடிக்கடி மது குடித்து விட்டு வந்ததால் அவருக்கும், அவரது மனைவி ராஜாமணிக்கும் பலநாட்கள் தகராறு ஏற்பட்டு வந்தது. அவ்வப்போது உறவினர்கள் இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர். அதேபோல் நேற்று சரவணன் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தபோது வழக்கம் போல் அவருக்கும், அவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டது.
செல்போனில் தகவல்
இதையடுத்து சரவணன் வெளியே சென்று விட்டார். பின்னர் வீட்டுக்கு வந்த போது அங்கு ராஜாமணி சேலையால் தூக்குபோட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதைத்தொடர்ந்து சரவணன் தனது மைத்துனர் வீரமணிக்கு செல்போனில் நடந்த சம்பவத்தை கூறி தானும் வாழ விரும்பவில்லை என்றும், எனவே, தற்கொலை செய்து கொள்ளபோவதாகவும், தனது குழந்தையை பத்திரமாக பார்த்து கொள்ளுமாறு கூறிவிட்டு செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார்.
குழந்தை தவிப்பு
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த வீரமணி தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து விட்டு, நெட்டப்பாக்கத்துக்கு வந்துள்ளார். அப்போது வீட்டில் குழந்தை மட்டும் அழுது கொண்டிருந்தது. சரவணன் மற்றும் ராஜாமணி ஆகிய இருவரும் தூக்கில் பிணமாக தொங்கினர்.
உறவினர்கள் கண்ணீர்
இதனை கண்டு வீரமணி மற்றும் உறவினர்கள் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த நெட்டப்பாக்கம் காவல்நிலைய போலீசார் கணவன், மனைவி இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கிராம மக்கள் சோகம்
மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறில் கணவன் - மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு 8 மாத ஆண் குழந்தையை தனியாக தவிக்க விட்டு சென்ற சம்பவம் நெட்டப்பாக்கம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.