இஎம்ஐ கட்ட சொல்லி வங்கிகள் நெருக்கடி.. வீதியில் இறங்கி பெண்கள் போராட்டம்
புதுச்சேரி : வங்கிகள் மாதாந்திர கடன் தொகையை கேட்டு நெருக்கடி கொடுத்து வருவதாக கூறி புதுச்சேரி அருகே நெட்டப்பாக்கம் கிராமத்தில் மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக 4 வது முறையாக ஊரடங்கு வரும் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையை 3 மாதங்களுக்கு வங்கிகள் கடன் தவணை வசூலிக்க கூடாது என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.

ஆனால் அந்த உத்தரவை மீறி வங்கிகள் கடனுக்கான மாதாந்திர தொகையை பிடித்தம் செய்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில் புதுச்சேரி நெட்டப்பாக்கம் பகுதியில் உள்ள வங்கிகள், அப்பகுதி மகளிர் சுய உதவிகுழுவினர் பெற்ற கடனுக்கான மாதாந்திர தவணைத் தொகையை கேட்டு நெருக்கடி அளித்து வருவதாக குற்றம் சாட்டியும், இதனை கண்டித்தும் மகளிர் சுய உதவி குழுவினர் நெட்டப்பாக்கம் பேருந்து நிறுத்தம் பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

இதனையடுத்து விரைந்து வந்த நெட்டப்பாக்கம் போலீஸார் மறியலில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது புகார் அளித்தால் வங்கிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனையடுத்து பெண்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். பெண்களின் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரியில் உள்ள இதேபோல் பல்வேறு வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் மாதத்தவணையை கட்டச்சொல்லி தொந்தரவு செய்து வருவதாக தொடர்ச்சியாக புகார் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications