புதுச்சேரி NDA கூட்டணியில் இருந்து என்ஆர் காங்கிரஸ் விலகல்? பாஜக நிர்வாகிகள் அவசரமாக டெல்லி பயணம்
புதுச்சேரி: புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. வரும் தேர்தலிலும் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி உறுதி செய்யப்பட்டு என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 16 இடங்களும், பா.ஜனதா கூட்டணிக்கு 14 இடங்களிலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டது. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து என்.ஆர்.காங்கிரஸ் கட்சி திடீரென விலக உள்ளதாக தகவல் பரவி வருகிறது. இதையடுத்து பாஜக நிர்வாகிகள் அவசரமாக டெல்லி விரைந்துள்ளனர்.
புதுச்சேரியில் பாஜக முதல் முறையாக கூட்டணி அரசில் கடந்த 2021ம் ஆண்டு இடம் பெற்றது. ரங்கசாமியின் என்ஆர் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்தது. ஐந்து ஆண்டு ஆட்சி நிறைவு பெற்ற நிலையில், மீண்டும் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில்
புதுச்சேரியில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு 16 இடங்களும், கூட்டணி கட்சியான பாஜகவிற்கு 14 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ள. ஆனால் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின் போது முதல்வர் ரங்கசாமி சில கட்சிகளை கூட்டணியில் இணைக்க கூடாது என்று நிபந்தனை விதித்தாராம். இதனால் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாம்.

தனியார் ஓட்டலில் பேச்சுவார்த்தை
நேற்று முன்தினம் நள்ளிரவு புதுச்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொள்ளவில்லை. மாறாக என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் லட்சுமி நாராயணன் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர், பாஜக தேர்தல் பொறுப்பாளர் மன்சுக் மாண்டவியாவை சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.
காத்திருந்த மத்திய அமைச்சர்
அப்போது முதல்வர் ரங்கசாமியின் கோரிக்கையை பாஜக ஏற்காததால் இந்த தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தனித்து போட்டியிட போவதாக கூறினார்களாம். எனினும் தனியார் ஓட்டலில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேற்று காலை 8.30 மணிக்கு என்.ஆர்.காங்கிரசார் வருகைக்காக காத்திருந்தார். 10.30 மணி வரை காத்திருந்தும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தரப்பில் யாரும் வரவில்லை. இதனால் ஏமாற்றமடைந்த மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, அவருடன் பாஜக மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம், சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் லாஸ்பேட்டையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றனர்.
அமித்ஷாவை சந்திக்க முடிவு
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் நிதின் நபின் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்திய பின் இறுதி முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இதனால் புதுச்சேரியில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவுகிறது. இதற்கிடையே என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று காலை முதல்வர் ரங்கசாமி இல்லத்தில் ரகசியமாக நடந்தது.
முதல்வர் ரங்கசாமி பதில்
பின்னர் முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், தேர்தலை சந்திக்க என்.ஆர். காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளது. கூட்டணி குறித்து பிறகு சொல்கிறேன் என்றார். பா.ஜனதாவுடன் கூட்டணி தொடர்கிறதா? என்று நிருபர்கள் கேட்டதற்கு உரிய நேரத்தில் பதில் சொல்கிறேன் என கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார. இதனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து என்.ஆர். காங்கிரஸ் விலகுகிறதா? என்ற விவாதம் அதிகமாகி உள்ளது.












Click it and Unblock the Notifications