தமிழக அரசியல் ஊழலால் சீரழிந்து விட்டது.. டிவீட் போட்டு திட்டிய கிரண் பேடி!
Recommended Video
புதுச்சேரி: தமிழகத்தின் ஊழல் நிறைந்த அரசியலும், மோசமான நிர்வாகமும்தான் சென்னையின் குடிநீர் பிரச்சினைக்கு முக்கியக் காரணம் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி கூறியுள்ளார்.
புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கும் இடையே ஆரம்பம் முதலேயே கடுமையான மோதல் போக்கு இருந்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே
கிரண்பேடியை பொருத்தவரையில் புதுச்சேரி அரசியலில் மட்டுமல்ல, இந்திய அளவில் நடைபெறும் நிகழ்வுகளுக்கும் தனது கருத்துகளை கூறி சர்ச்சைகளில் சிக்கி வருவது வழக்கம். இந்த நிலையில் அவர் தற்போது தமிழகத்தின் பக்கம் பாய்ந்துள்ளார்.
முக நூல் பதிவு
இந்நிலையில் கடந்த சில நாட்களாக சென்னையில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பஞ்சம் குறித்து கிரண்பேடி சமூக வலைதளத்தில் தனது கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் இன்று தமிழக அரசை கடுமையாக சாடி கிரண்பேடி கருத்து ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
|
வறண்ட சென்னை
அதில் அவர் கூறியுள்ளதாவது, இந்தியாவின் 6 வது பெரிய நகரமான சென்னை, இந்தியாவிலேயே முதலாவதாக வறட்சியை நோக்கி செல்கிறது. அதே நேரத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இதே நகரம் வெள்ளத்தில் மூழ்கியது.
மோசமான அரசியல்
இதற்கு காரணம், மோசமான நிர்வாகம், ஊழல் அரசியல், அலட்சியமான அதிகாரிகள் என தமிழக அரசை கடுமையாக சாடியுள்ளார். முதலமைச்சர் நாராயணசாமியுடன் மோதல் போக்குடன் இருந்து வரும் கிரண்பேடி, தற்போது அண்டை மாநிலமான தமிழகத்தையும் வம்புக்கு இழுத்திருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கு வரப் போறோரா
புதுச்சேரி, தமிழக ஆளுநர்கள் மாற்றப்படலாம் என்ற ஒரு பேச்சு கொஞ்ச காலமாக ஓடிக் கொண்டுள்ளது. ஒரு வேளை கிரண் பேடியைக் கொண்டு தமிழக ஆளுநராக்கும் திட்டம் மத்திய அரசிடம் இருக்கா என்ற சந்தேகம், கிரண் பேடி பேச்சைப் பார்க்கும்போது தோன்றுகிறது. இதுவரை புதுச்சேரி அரசியலை சாடி வந்த கிரண் பேடி, எல்லை தாண்டி தமிழகம் வந்து விமர்சித்திருப்பது சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது.
யாரை குற்றம் சாட்டுகிறார்
ஊழல் அரசியல் என்று அவர் கூறியிருப்பது தற்போதைய அதிமுக ஆட்சியையா அல்லது இதுவரை இருந்த ஊழல் அரசியல்வாதிகளையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. வெளிப்படையாக அவர் பேசாமல், பூடகமாக பேசியிருப்பதும் பல சந்தேகங்களை கிளப்புவதாக உள்ளது.