ஆஹா என்ன ஒரு அபார ஐடியா.. டூவீலர் சீட் அடியில் குவார்ட்டர் பாட்டில்கள்.. சிக்கிய கும்பல்!
Recommended Video
புதுச்சேரி: புதுச்சேரியில் இரு சக்கர வாகன இருக்கையில் மறைத்து வைத்து தமிழக பகுதிக்கு கடத்த முயன்ற 839 மதுபாட்டில்களை முதலியார்பேட்டை போலீசார் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனர்.
பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பறக்கும்படை அதிகாரிகள் மற்றும் முதலியார்பேட்டை போலீசார் இன்று மரப்பாலம் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்தவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையின் போது இரு சக்கர வாகன இருக்கையில் 839 மதுபாட்டில்கள் மறைத்து வைத்து தமிழக பகுதிக்கு கடத்த இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்திய போது தியாகு, பாலு என்ற இருவரும் தேர்தலை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு மதுபாட்டில்களை கடத்தி செல்ல திட்டமிட்டு மது பாட்டில்களை இருசக்கர வாகனத்தில் கடத்தியது தெரிய வந்தது. இதனையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள், இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து கலால்துறையிடம் ஒப்படைத்தனர்.
இதேபோல் பாகூர் பகுதியில் போலீசார் சோதனை மோற்கொண்டிருந்த போது அப்பகுதியாக வந்த காரில் ராஜேஷ் என்பவர் தமிழக பகுதிக்கு சாராய மூட்டைகளை கடத்தியது தெரியவந்ததை அடுத்து பாகூர் போலீசார் ராஜேஷை கைது செய்து சாராய மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.
அவரிடமிருந்து 30 ஆயிரம் மதிப்பிலான 460 லிட்டர் சாராய மூட்டை மற்றும் காரையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.