‛‛வீடு வீடாக குக்கர் வினியோகம்’’.. பறக்கும் படை ‛என்ட்ரி’.. தெறித்து ஓடிய கும்பல்
புதுச்சேரி: வரும் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலையொட்டி இரவில் வீடு வீடாக குக்கர் வழங்கியதை வீடியோ எடுத்த நபருக்கு ஒரு கும்பல் மிரட்டல் விடுத்த நிலையில் பறக்கும் படை வந்த நிலையில் அவர்கள் ஓட்டம் பிடித்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 40 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இந்த 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் சில வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்களை வழங்க வாய்ப்புள்ளது.

இதனை தடுக்கும் பணியில் பறக்கும் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பதுக்கி வைக்கப்பட்டு இருக்கும் பரிசு பொருட்கள், பணத்தை பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் வாக்காளர்களுக்கு இரவில் வீடு வீடாக குக்கர் வழங்கிய வீடியோ வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் புதுச்சேரி லோக்சபா தொகுதிக்குட்பட்ட காரைக்காலில் நடந்துள்ளது. காரைக்காலில் குறிப்பிட்ட பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லை என்று பொதுமக்கள் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் தான் அந்த பகுதியில் வசிக்கும் மக்களை குறிவைத்து இரவில் சரக்கு வாகனத்தில் வந்த கும்பல் வீடு வீடாக சென்று குக்கர் வழங்கி உள்ளது.
இதனை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதனை கவனித்த அந்த கும்பல், ‛‛உன்னை போல் பலபேரை நாங்கள் பார்த்துள்ளோம். இங்கிருந்து போ'' எனக்கூறியது. ஆனால் அவர் கேட்கவில்லை. இதனால் அந்த கும்பல் வீடியோ எடுத்தவரிடம் தகராறு செய்து மிரட்டல் விடுத்தது. இதற்கிடையே தான் அங்கு பறக்கும் படையின் வாகனத்தில் வந்தனர்.
இதனை கவனித்ததும் வீடு வீடாக குக்கர் வழங்கிய கும்பல் உடனடியாக நாலாபுறமும் சிதறி ஓடியது. இதற்கிடையே தான் சம்பவம் தொடர்பாக பறக்கும் படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் இந்த குக்கர் எந்த வேட்பாளர் சார்பில் வழங்கப்பட்டது என்பது தெரியவில்லை. இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
புதுச்சேரியை பொறுத்தமட்டில் அது யூனியன் பிரதேசமாக உள்ளது. அங்கு ஒரேயொரு லோக்சபா தொகுதி மட்டும் தான் உள்ளது. தற்போது சிட்டிங் எம்பியாக புதுச்சேரி முன்னாள் முதல்வரான காங்கிரஸ் கட்சியின் வைத்திலிங்கம் போட்டியிடுகிறார். இவர் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் அங்கு மீண்டும் களமிறங்கி உள்ளார்.
பாஜக சார்பில் அமைச்சர் நமாச்சியம் போட்டியிடுகிறார். இதுதவிர அதிமுக சார்பில் தமிழ் வேந்தன், பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் அழகரவேலு, நாம் தமிழர் சார்பில் மேனகா போட்டியிடுகின்றனர். இதுதவிர சுயேச்சைகளும் களத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications