வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்பே பரபர! புதுச்சேரியில் பாதுகாப்பு படைக்கும் போலீசுக்கும் வாக்குவாதம்
புதுச்சேரி: புதுச்சேரியில் வாக்கு எண்ணும் மையத்தில் துணை ராணுவப் படைக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நமது நாட்டில் லோக்சபா தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாகப் பதிவானது. வாக்குப்பதிவு அனைத்தும் அமைதியாக நடந்து முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நிலையில், அதற்குத் தேவையான ஏற்பாடுகள் நாடு முழுக்க செய்யப்பட்டுள்ளது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும் நிலையில், அதைத் தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.
இதற்காக நாடு முழுக்க வாக்கு எண்ணும் மையங்களில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் அலுவலர்களைத் தாண்டி வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் முகவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. முகவர்களும் ஐடி கார்ட் எடுத்து வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், முகவர்கள் மொபைல் எடுத்து வர நிச்சயம் அனுமதி இல்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
புதுவையிலும் இன்று வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது. புதுச்சேரியில் ஒரே ஒரு லோக்சபா தொகுதி இருக்கும் நிலையில், அதற்காக இரண்டு இடங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இதற்கிடையே வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்பே புதுவையில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது புதுச்சேரியில் வாக்கு எண்ணும் மையத்தில் துணை ராணுவப் படைக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் மையத்திற்குத் துணை ராணுவப் படை செல்போன் கொண்டு வந்ததற்கு போலீஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும், இத்தனை நாட்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போது செல்போன் எடுத்துச் சென்றதாகக் கூறி துணை ராணுவ படையினர் வாக்குவாதம் செய்துள்ளனர். ஒரு கட்டத்தில் இரு தரப்பும் மாறி மாறி ஒருமையில் திட்டும் அளவுக்குச் சென்றுவிட்டது.
இரு தரப்பையும் தேர்தல் அலுவலர்கள் சமாதானப்படுத்த முயன்றனர். இருப்பினும், செல்போன் எடுத்து வந்தால் அனுமதிக்க முடியாது என்று போலீசார் திட்டவட்டமாகக் கூறிவிட்டனர். வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்பே இரு தரப்பிற்கும் இடையே ஏற்பட்ட இந்த வாக்குவாதத்தால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications