அரசு நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கிரிக்கெட் மைதானம்.. சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு
புதுச்சேரி: புதுவை துத்திப்பட்டு கிராமத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள புதுச்சேரி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் போட்டிகள் நடத்தத் தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்குப் பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கும், புதுச்சேரி அரசுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி கிரிக்கெட் சங்கத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சியாச்சின் டெக்னாலஜிஸ் என்ற தனியார் நிறுவனம், நீர்நிலைகளையும், அரசு புறம்போக்கு நிலத்தையும் ஆக்கிரமித்து, அதில் கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டியுள்ளதாகக் கூறி, புதுச்சேரி லாஸ்பேட்டையைச் சேர்ந்த சந்திரன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், அரசு புறம்போக்கு நிலம், நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு தொடர்பாக பல்வேறு கிராம மக்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் ஆய்வு நடத்திய புதுவை நகரமைப்புத் துறை செயலாளர் அளித்த அறிக்கையில் ஸ்டேடியம் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளதாகவும், அதற்கான மின் இணைப்பு, குடிநீர் இணைப்புகளைத் துண்டிக்கவும், அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்கவும் பரிந்துரைத்ததாகக் கூறப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், அரசு இடத்தில் இருந்து வெளியேறும்படி சியாச்சின் நிறுவனத்திற்குக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், அந்த உத்தரவை அமல்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால், அந்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் எனவும், ஸ்டேடியத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தத் தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ராஜா மற்றும் பரத் சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு, மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கும், புதுச்சேரி அரசுக்கும் உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளிவைத்தது.












Click it and Unblock the Notifications