எல்லாமே சதி.. அதிமுக தொண்டர்களிடம் ஓபிஎஸ் பொதுமன்னிப்பு கேட்கணும்.. ஈபிஎஸ் ஆதரவாளர் போட்ட குண்டு!
புதுச்சேரி : ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, திமுகவின் மறைமுக அணியாகச் செயல்பட்டு, அதிமுகவை அழிக்க சதி செய்து, அதில் தோல்வியடைந்தவர் ஓ.பன்னீர்செல்வம் என ஈபிஎஸ் ஆதரவாளர் புதுச்சேரி அன்பழகன் தெரிவித்துள்ளார்.
Recommended Video

அதிமுகவுக்கு அவப்பெயரைத் தேடித் தந்த ஓ.பன்னீர்செல்வம், தொண்டர்களிடம் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன்.
உயர் நீதிமன்றத்தின் உறுதி செய்யப்படாத தீர்ப்பை கையில் வைத்துக்கொண்டு, இணைந்து செயல்படலாம் என அவர் அழைப்பது, அவரது சிறந்த நடிப்புக்கு உதாரணம் எனச் சாடியுள்ளார் புதுச்சேரி அன்பழகன்.

துரோகி ஓபிஎஸ்
புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு இணைந்து செயல்பட வாய்ப்பில்லை என எடப்பாடி பழனிசாமி அறிவித்ததை வரவேற்கிறோம். கட்சிக்கு துரோகம் செய்து, சட்ட விதிகளை மீறி எதிர்த்து நீதிமன்றம் சென்ற ஓபிஎஸ்ஸுடன் எந்த ஒட்டும் உறவும் இல்லை. இணைந்து செயல்படலாம் என அழைக்கும் தகுதியும் அவருக்கு இல்லை. இணைந்து செயல்படலாம் என அவர் அழைப்பது, அவரது சிறந்த நடிப்புக்கு உதாரணம்.

அதிமுகவை பலவீனப்படுத்தியவர்
ராணுவக் கட்டுப்பாடு மிகுந்த அதிமுகவில் தன் சுயநலத்துக்காக பலமுறை பிளவுகளை ஏற்படுத்தி கட்சியை பலவீனப்படுத்தியவர். ஒவ்வொரு முறை பிரச்சினையின் போதும் கோர்ட்டை நாடி கட்சியை பலவீனப்படுத்தி வருகிறார் ஓபிஎஸ். தீர்ப்பில் பல்வேறு கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன. நீதிமன்றத்தை விமர்சிக்க விரும்பவில்லை. அதேநேரத்தில் ஒன்றரை கோடி தொண்டர்களின் கருத்துக்களை 2 ஆயிரத்து 500 பொதுக்குழு உறுப்பினர்கள் முடிவு செய்யலாமா என நீதிமன்றம் கேள்வி எழுப்புகிறது.

நீதிமன்றத்தின் கேள்வி
நாடாளுமன்றம், சட்டமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் தான் சட்டங்களை நிறைவேற்றுகின்றனர். அதேபோல கிளை, வட்டம், மாவட்டம், மாநில நிர்வாகிகள், எம்.எல்.ஏ எம்.பி ஆகியோரால் தேர்வு செய்யப்பட்டவர்கள்தான் பொதுக்குழு உறுப்பினர்கள். அவர்கள் நியமிக்கப்பட்டவர்கள் அல்ல. ஒற்றைத் தலைமை அவசியம் என்பது கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகளின் கருத்து.

எப்படி ஏற்க முடியும்
ஒவ்வொரு முறையும் கட்சியில் பிளவை உண்டாக்கி தி.மு.க.வின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் ஓ.பி.எஸ். செயல்படுகிறார். அதோடு அ.தி.மு.க. தொண்டர்கள் கோவிலாக நினைக்கும் கட்சி தலைமை அலுவலகத்தை காலால் எட்டி உதைத்து, ரவுடிகள் மூலம் அங்கிருந்த ஆவணங்களை அள்ளி சென்றவரை எப்படி ஏற்க முடியும்?

பொதுமன்னிப்பு
இந்த தீர்ப்பு இறுதி தீர்ப்பல்ல, மறு ஆய்வுகுட்பட்டது. இதை எதிர்த்து மேல் முறையீடு செய்யலாம். கட்சிக்கு துரோகம் செய்தவர்களோடு இணைந்து செயல்பட யாரும் நிர்ப்பந்திக்க முடியாது. கருணாநிதியை பாராட்டுவது தான் ஜெயலலிதா விசுவாசமா? கட்சிக்கு களங்கம் விளைவித்த அ.தி.மு.க தொண்டர்களிடம் ஓ.பி.எஸ் பொதுமன்னிப்பு கேட்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications