மாஸ்க் அணியாவிட்டால் ரூ.100 அபராதம்.. டூவீலரில் ஒருவருக்கு மட்டுமே அனுமதி.. நாராயணசாமி அதிரடி
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் பொதுமக்கள் முக கவசம் அணியாமல் வெளியே வந்தால் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் இருசக்கர வாகனத்தில் ஒருவர் மட்டுமே செல்ல வேண்டுமெனவும் அறிவுறுத்தல்.
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் நாராயணசாமி, "புதுச்சேரியில் 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அதில் மாஹேவை சேர்ந்த மூதாட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டார். மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதனிடையே 6 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த மேலும் ஒருவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். இதனால் தற்போது 5 பேர் மட்டுமே புதுச்சேரியில் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுச்சேரியில் தொடர்ந்து தொற்று அதிகரிக்காமல் இருப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நேரத்தில் அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், பொதுமக்கள் வரும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கை பின்பற்றி, கொரோனா தொற்று இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் வரும் 20 ஆம் தேதி முதல் அத்தியாவசிய தேவைகளுக்கான தொழிற்சாலைகள் வழக்கம்போல் இயங்கும். புதுச்சேரியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு தமிழகத்தில் இருந்து அதிகளவில் தொழிலாளர்கள் வருகின்றனர். அதனால் தமிழக எல்லை பகுதிகளில் மேலும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு யாரையும் உள்ளே அனுமதிக்க கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் பலமுறை வலியுறுத்தியும் பொதுமக்கள் முக கவசம் அணியாமல் வெளியே வருகின்றனர். அதனால் முக கவசம் அணியாமல் செல்வோருக்கு ரூபாய் 100 அபராதம் வசூலிக்க வேண்டுமெ என காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது 17.04.2020 வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது. மேலும் இருசக்கர வாகனத்தில் ஒருவர் மட்டுமே செல்ல வேண்டும்.

20 ஆம் தேதிக்கு பிறகு அரசு அலுவலகங்கள் இயங்கும். அரசு ஊழியர்கள் கடுமையான சமூக விலகளை பின்பற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications