புதுச்சேரி்: பெண்களுக்கு இலவசப் பேருந்து... பாரதியார் நூல்கள் டிஜிட்டல்மயம்.. அமைச்சர் தகவல்
புதுச்சேரி : தமிழகத்தில் பெண்கள், திருநங்கைகள் பேருந்தில் இலவசமாக பயணம் செய்வது போலவே புதுச்சேரியிலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய பிரத்யேக பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
நிர்பயா திட்டத்தின் கீழ் இளஞ்சிவப்பு நிறத்தில் பெண்களுக்கென இலவச பேருந்துகள் இயக்கப்படும் என புதுச்சேரி மாநில போக்குவரத்து துறை அமைச்சர் சந்திரபிரியங்கா தெரிவித்துள்ளார்.
மேலும் அனைத்து பேருந்துகளிலும் பயணிகளின் பாதுகாப்பு கருதி சிசிடிவி பொருத்தப்பட உள்ளதாக புதுச்சேரி மாநில அமைச்சர் சந்திரபிரியங்கா தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு டிரைவிங் லைசென்ஸ்
புதுச்சேரி மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திரபிரியங்கா சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர் சந்திப்பு நிகழ்த்தினார். அப்போது பேசிய அவர் நாட்டிலேயே முதல் முறையாக பெண்கள் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கு சனிக்கிழமை தோறும் போக்குவரத்து அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடத்தப்படும் தெரிவித்தார். மேலும் இந்த முகாமில் மாற்றுத் திறனாளிகளும் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்த அமைச்சர் சந்திரபிரியங்கா பிஆர்டிசியில் உள்ள பேருந்துகளில் 164 மட்டுமே இயக்கப்படுகிறது என்றும் பழுதாகி உள்ள 90 பேருந்துகள் விரைவில் சீர் செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்தார்.

பெண்கள் இலவசமாக செல்லலாம்
கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட வால்வோ ஏசி பேருந்துகள் பழுது பார்க்கப்படும் மீண்டும் இயக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். பிஆர்டிசியில் டிக்கெட் பரிசோதகர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் தமிழ்நாடு அரசு போக்குவரத்துடன் இணைந்து டிக்கெட் பரிசோதனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் சந்திர பிரியங்கா தெரிவித்தார். பி.ஆர்.டி.சி.யை லாபகரமாக இயக்கும் நோக்கத்தில் மத்திய அரசு அனுமதியுடன் 200 புதிய பேருந்துகள் வாங்க உள்ளதாகவும் இதில் பிங்க் நிற பேருந்துகளை பெண்களுக்கென இலவசமாக இயக்க முடிவு எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பேருந்தில் சிசிடிவி கட்டாயம்
மேலும் அனைத்து பேருந்துகள், பேருந்து நிறுத்தங்கள் சிசிடிவி மற்றும் ஜிபிஎஸ் மூலம் கண்காணிக்கப்படும் எனவும் போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்தார். ஆதிதிராவிடர் நலத்துறையில் தீபாவளி பண்டிகைக்கு இலவச வேட்டி, சேலைக்கு பதில் பணம் வழங்கப்பட்டதால் பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி, சேலை வழங்க திட்டமிட்டுள்ளதாக சந்திர பிரியங்கா தெரிவித்தார். மேலும் பாண்டெக்ஸ், பாண்பேப், அமுதசுரபி மூலம் இலவச துணிகளைக் கொள்முதல் செய்ய திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தார்.

பாரதியார் நூல்கள் டிஜிட்டலாக்கப்படும்
மகாகவி பாரதியார் இல்லத்தில் உள்ள அவரது கையெழுத்துப் பிரதிகள் முதல் அனைத்து நூலகங்களிலும் உள்ள அவர் தொடர்பான முக்கிய ஆவணங்கள், பாடல்கள், கவிதைகள், நூல்களை அனைத்தும் டிஜிட்டல் மயமாக்குவோம் எனவும் அமைச்சர் சந்திரபிரியங்கா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications