புதுச்சேரியில் விறுவிறு வாக்குப் பதிவு.. விடிவுகாலம் பிறக்கும் என நாராயணசாமி பேட்டி
Recommended Video
புதுச்சேரி: புதுச்சேரியில் லோக்சபா மற்றும் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குபதிவு காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது.
வாக்குப்பதிவு தொடங்கியவுடன் 10 க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து தேர்தல் துறை அதிகாரிகள் உடனடியாக அதனை சரிசெய்தார்கள்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி புஸ்சி வீதியில் உள்ள பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் அலுவலகத்திலும், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்திலும் தங்களது வாக்கை பதிவு செய்தார்கள்.
புதுச்சேரி மக்களவை தொகுதிக்கான தேர்தலில் காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ், அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட 18 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதேபோல் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் 8 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இத்தேர்தலில் மொத்தம் 9 லட்சத்து 73 ஆயிரத்து 161 வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்ய உள்ளனர். இதற்காக புதுச்சேரியில் மொத்தம் உள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 970 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 2,421 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 1147 மின்னணு கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 1209 விவிபாட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
மேலும் வாக்குப்பதிவு மையங்களில் குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும், மாற்றுதிறனாளிகளுக்கு போக்குவரத்து வசதி, சாய்தளம், பார்வையற்ற வாக்காளர்களின் வசதிக்காக பிரெய்லி வாக்குச்சீட்டு, வாக்காளர் உதவி மையம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை தேர்தல் துறை செய்துள்ளது. பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளாக கண்டறியப்பட்ட 222 வாக்குச்சாவடிகளில் துணை ராணுவம் மற்றும் போலீசார் அதிகளவில் பாதுகாப்புபணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

இத்தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் நாராயணசாமி, மோடி தலைமையிலான அரசுக்கு சமாதி கட்டுகிற தேர்தலாக இருக்கும் என்றும், நாட்டை சின்னப்பின்னமாக்கிய மோடியை பதவியில் இருந்து இறக்க மக்கள் தயாராக விட்டனர் எனவும் தெரிவித்த நாராயணசாமி, ராகுல் பிரதமரானால்தான் விடிவு காலம் பிறக்கும் என மக்கள் நினைக்கின்றனர். இது வாக்களிக்கும் மக்கள் முகங்களில் தெளிவாக தெரிகிறது என்றார்.

இதனையடுத்து சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தில் வாக்களித்த பின் செய்தியாளர்களை சந்தித்த ஆளுநர் கிரண்பேடி, தேர்தலில் மக்கள் தவறாமல் வாக்களித்து தங்களுடைய ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்றும், வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை, தேர்தலுக்கு பிறகு அவர்களுடைய செயல்பாடுகளை மக்கள் கண்காணிக்க வேண்டுமென கிரண்பேடி அறிவுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications