கர்நாடகாவை தொடர்ந்து புதுச்சேரி.. அரசு பள்ளியில் மாணவி ஹிஜாப்பை அகற்ற கூறியதால் பரபரப்பு
புதுவை: கர்நாடகாவை தொடர்ந்து புதுச்சேரியில் அரியாங்குப்பம் அரசுப் பள்ளியில் முஸ்லிம் மாணவி ஒருவரது ஹிஜாப்பை அகற்றுமாறு பள்ளி தலைமை ஆசிரியர் கூறியதாக புகார் எழுந்துள்ளது.
Recommended Video
கர்நாடகாவில் முஸ்லீம் மாணவிகள் பியு கல்லூரிக்கு ஹிஜாப் எனப்படும் ஸ்கார்ஃப் அணிந்து வர திடீர் தடை விதிக்கப்பட்டது. அந்த மாநிலத்தில் உடுப்பி, சிக்மக்ளூர், மங்களூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பிரத்யேக ப்ரீ யூனிவர்சிட்டி கல்லூரிகளில் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர எதிர்ப்பு எழுந்துள்ளது.
முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிந்தால் நாங்கள் காவி துண்டு அணிவோம் என மாணவர்கள் கழுத்தில் காவி துண்டை அணிந்து வருகிறார்கள். இது குறித்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில் பொதுவான டிரஸ் கோடு விதியை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரி
கர்நாடகாவில் இந்த சம்பவம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த நிலையில் புதுச்சேரியிலும் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிக்கு தடை விதித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா ஊரடங்கிற்கு பிறகு கடந்த பிப்ரவரி 4-ஆம் தேதி புதுவையில் பள்ளிகள் திறக்கப்பட்டன. அப்போது அரியாங்குப்பத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளிக்கு ஹிஜாப் அணிந்து 9-ஆம் வகுப்பு மாணவி வந்துள்ளார்.

ஹிஜாப் அணிய தடை
அவரை தடுத்து நிறுத்தி ஹிஜாப்பை அகற்றிவிட்டு வருமாறு அந்த பள்ளித் தலைமை ஆசிரியர் கூறியதாக புகார் எழுந்துள்ளது. பள்ளி தலைமை ஆசிரியர் மீது பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த நிலையில் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பிடி ருத்ராவுடன் அரசியல் கட்சியினரும் சமூக ஆர்வலர்களும் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

முஸ்லீம் மாணவிகள்
அப்போது பள்ளி வளாகத்திலும் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதிக்குமாறு அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்படும் என உறுதியளித்தார். இதுகுறித்து அந்த மாணவியின் தந்தை கூறுகையில், 1ஆம் வகுப்பிலிருந்து அந்த பள்ளியில்தான் எனது மகள் படித்து வருகிறார். இதுவரை எந்த ஆசிரியர்களும் ஹிஜாப்பை அகற்றுமாறு கூறியதில்லை.

ஹிஜாப் இல்லாமல் எப்படி அனுப்புவது
தற்போது அவர் பூப்பெய்துவிட்டார். ஹிஜாப் அணியாமல் எங்கள் மகளை எப்படி வெளியே அனுப்ப முடியும்? பள்ளி திறந்த போது எனது மகள் பள்ளிக்குள் அனுமதிக்கப்பட்டார். ஆனாலும் ஹிஜாப்பை கழற்றி பைக்குள் வைக்குமாறு தலைமை ஆசிரியர் கூறியுள்ளார். கடந்த இரு மாதங்களுக்கு முன்பும் ஹிஜாப் அணிந்து கொண்டு பள்ளிக்குள் வரக் கூடாது என எனது மகளை தலைமை ஆசிரியர் எச்சரித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கு
இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் கொண்டு செல்வதற்குள் கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டன. தற்போது பள்ளி திறந்த முதல் நாளிலேயே எனது மகளை குறி வைத்து ஹிஜாப்பை அகற்ற சொல்லியுள்ளார்கள். இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் நாங்கள் கேட்ட போது வகுப்பில் ஹிஜாப் அணிய வேண்டும் என்றால் பள்ளிக் கல்வித் துறையிடம் அனுமதி பெற்று வர வேண்டும் என கூறிவிட்டார் என்றார் அந்த மாணவியின் தந்தை. ஹிஜாப் அணிந்து வரக் கூடாது என கூறியதை அடுத்து புதுவை மாணவர் கூட்டமைப்பு மற்றம் சமூக அமைப்பினர் பள்ளியை முற்றுகையிட்டு மனு கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஹிஜாப் விவகாரம் பெரும் சர்ச்சையான கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில் புதுவையில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications