பட்ஜெட் பெருத்த ஏமாற்றத்தை தந்துள்ளது.. பெரு முதலாளிகளுக்கான பட்ஜெட்.. நாராயணசாமி!
Recommended Video
புதுச்சேரி: இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய பட்ஜெட்டில் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையிலான எந்த அம்சங்களும் இல்லாத, ஏமாற்றத்தை ஏற்படுத்தும் பட்ஜெட்டாக உள்ளது என முதலமைச்சர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் நாராயணசாமி, மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாரம் தாக்கல் செய்த பட்ஜெட் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் என எதிர்பார்த்தேன். ஆனால் பெருத்த ஏமாற்றம் தான் ஏற்பட்டுள்ளது.

இந்த பட்ஜெட்டில் வேலை வாய்ப்பு ஏற்படுத்துதல், பணவீக்கத்தை கட்டுப்படுத்துதல், விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது, இப்படி எதிர்பார்த்தது எதுவும் அறிவிக்கப்படாதது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதார வீழ்ச்சியில் இருந்து நாட்டை மீட்க இந்த பட்ஜெட் பயனளிக்காது.
ஏற்கனவே மத்திய அரசு உதான் திட்டத்தின் கீழ் 100 விமான நிலையங்கள் கொண்டு வரப்படும் என கடந்த பட்ஜெட்டில் அறிவித்தது. அதில் 30 விமான நிலையம் தான் அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது மேலும் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்பது எப்படி சாத்தியமாகும் என கேள்வியெழுப்பினார் நாராயணசாமி.

ஏற்கனவே ஏர் இந்தியா விமான நிறுவனத்தை விற்க முடிவெடுத்த அரசு தற்போது பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ள ரயில்களையும் தனியாருக்கு விற்க முடிவு செய்துள்ளதாகவும், இப்படி அரசின் சொத்துக்களை தனியாருக்கு விற்று பெரு முதலாளிகளை வாழவைக்கும் வகையில் இந்த பட்ஜெட்டில் உள்ள அனைத்து அம்சங்களும் அமைந்துள்ளது.

மேலும் சிறிய மாநிலங்களின் வளர்ச்சிக்கான எந்த அறிவிப்பும் இல்லாத நிலையில், புதுச்சேரி மாநிலத்தை நிதித்துறை அமைச்சர் ஒட்டுமொத்தமாக புறக்கணித்துள்ளார் என்பதை இந்த பட்ஜெட் உறுதியளித்துள்ளது. மொத்தத்தில் நாட்டை பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மேலே கொண்டு வருவதற்கான எந்த ஒரு அம்சமும் இந்த மத்திய பட்ஜெட்டில் இல்லாதது ஏமாற்றமளிக்கின்றது என்றார்.












Click it and Unblock the Notifications