சோனியா பிறந்தநாள்... காங்.தொண்டர்களுக்கு ஒரு கிலோ வெங்காயம் அன்பளிப்பு
புதுச்சேரி: காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி பிறந்தநாளையொட்டி கட்சி தொண்டர்களுக்கு ஒரு கிலோ வெங்காயத்தை அன்பளிப்பாக வழங்கினார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி.
வழக்கமாக இனிப்புகள் வழங்கப்படும் நிலையில் இந்தாண்டு வெங்காயத்தை பரிசாக தந்துள்ளது புதுச்சேரி மாநில காங்கிரஸ் கமிட்டி.
இதனிடையே காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் சஞ்சய் தத்துக்கு தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் வெங்காய மாலை அணிவித்து கவனத்தை ஈர்த்துள்ளார்.

காங்கிரஸ் ஏற்பாடு
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்தியின் பிறந்தநாளையொட்டி புதுச்சேரியில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் மற்றும் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர், நிகழ்ச்சியில் கலந்துகொண்ட காங்கிரஸ் தொண்டர்களுக்கு இனிப்புகளுக்கு பதிலாக வெங்காயத்தை பரிசாக அளித்தனர்.

நலம் பெற்றார்
கடந்த 10 நாட்களுக்கு முன்பு கால் மூட்டில் அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட நாராயணசாமி, அதன்பின்னர் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளவில்லை. வீட்டில் ஓய்வில் இருந்தபடியே அலுவல் பணிகளை கவனித்த அவர், சோனியாகாந்தி பிறந்தநாளையொட்டி அந்த விழாவில் பங்கேற்க சென்றார்.

கவனம் ஈர்ப்பு
இதனிடையே தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் மேலிடப் பார்வையாளர் சஞ்சய் தத்துக்கு வெங்காய மாலை அணிவித்து கவனத்தை ஈர்த்துள்ளார். ஏலக்காய் மாலை, சந்தனமாலை என்கிற விலை உயர்ந்த மாலைகள் வரிசையில் வெங்காய மாலையும் இடம்பெற்றுவிட்டதை உணர்த்துவதற்காக இப்படி மாலை போட்டதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

விழிப்புணர்வு
வெங்காய விலை உயர்வை கெட்டியாக பிடித்துக்கொண்ட காங்கிரஸ் கட்சியினர் இதைவைத்து மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக பரப்புரை செய்யத் தொடங்கியுள்ளனர். மேலும், காங்கிரஸ் ஆட்சியில் ஏற்பட்ட வெங்காய தட்டுப்பாட்டின் போது போர்க்கால நடவடிக்கைக மேற்கொண்டதாகவும், இப்போதும் மத்திய அரசு அலட்சியமாக இருப்பதாகவும் காங்கிரஸ் நிர்வாகிகள் பிரச்சாரத்தை முனெடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications