உப்பனாறு வாய்க்காலில் சரிந்து விழுந்த 3 அடுக்கு வீடு.. மாற்று வீடு வழங்க புதுவை முதல்வர் உறுதி
புதுவை: உப்பனாறு வாய்க்கால் அருகே கட்டப்பட்டு கிரகபிரவேசத்திற்கு தயாராக இருந்த வீடு இடிந்து விழுந்த நிலையில் அதன் உரிமையாளருக்கு மாற்று வீடு வழங்கப்படும் என புதுவை முதல்வர் ரங்கசாமி உறுதியளித்துள்ளார்.
புதுவையில் மேட்டுப் பகுதியில் இருந்து வெளியேறும் சாக்கடை நீர் அனைத்தும் உப்பனாறு வாய்க்கால் வழியாக வெளியேறும். ஆனால் இந்த வாய்க்கால் பல ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் இருக்கிறது. இதனால் தண்ணீர் செல்ல வழியில்லாத நிலை உள்ளது.

இதற்கு மேல் பாலம் அமைத்து காமராஜர் சாலையில் இருந்து மறைமலை அடிகள் சாலை வரை மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் ஒப்பந்ததாரர்களுக்கு உரிய பணப்பலன் கிடைக்காததால் இந்த பணி நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் மறைமலை அடிகள் சாலையைத் தாண்டி ஆட்டுப்பட்டி வழியாக வாய்க்காலை சீரமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று மதியம் பொக்லைன் இயந்திரம் மூலம் வாய்க்காலில் பக்கவாட்டு பகுதி சீரமைக்கப்பட்டு சுவர் எழுப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக பக்க வாய்க்காலில் ஜேசிபி மூலம் மணல் அள்ளும் பணி நடந்து கொண்டிருந்தது. இதையடுத்து வாய்க்கால் ஓரம் இருந்த வீடுகளுக்கு அதிர்வு ஏற்பட்டது.
இதனால் அப்பகுதி மக்கள் மணல் அள்ளும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த முன்னாள் எம்எல்ஏவும் அதிமுக மாநில செயலாளருமான அன்பழகனும் வாய்க்கால் அமைக்கும் பணிக்கு ஜேசிபி மூலம் மணல் அள்ளுவதை எதிர்த்தார். இதையடுத்து ஒதியன்சாலை போலீஸார் அங்கு விரைந்தனர்.
அங்கு பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்த நிலையில் திடீரென அப்பகுதியில் கட்டப்பட்ட 3 அடுக்கு மாடி கட்டடம் பாதியாக சரிந்து கால்வாயில் விழுந்தது. இதையடுத்து அங்கிருந்தோ தலைத்தெறிக்க ஓடினர். விசாரணையில் அந்த வீடு புதிதாக கட்டப்பட்டதாம். ஆட்டுப்பட்டில் சேகர்- சித்ரா தம்பதியினருக்கு சொந்தமான இந்த வீட்டிற்கு வரும் பிப்ரவரி 1ஆம் தேதி கிரகபிரவேசம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்ததாம்.
இந்த நிலையில் வீடு முற்றிலும் சரிந்து கால்வாயில் விழுந்ததை கண்ட சித்ரா கதறி அழுதார். இந்த காட்சி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உப்பனாற்று பணியினால் தங்கள் வீட்டை குருவி சேர்ப்பது போல் பணத்தை சேர்த்து கட்டிய வீடு இப்படி தரைமட்டமானது என சித்ரா கதறியது அங்கிருந்தோர் மனதை வேதனை அடைய செய்தது.
இந்தநிலையில் செய்வதறியாமல் கண்ணீருடன் இருந்த சித்ரா- சேகர் தம்பதியை முன்னாள் எம்எல்ஏ அன்பழகன் , முதல்வர் ரங்கசாமியிடம் அழைத்து சென்றார். அப்போது ரெட்டியார்பாளையம் அருகே அரசு குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. அங்கு இலவசமாக தங்கிக் கொள்ள நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் அனுமதி அளித்துள்ளார். அந்த கட்டடம் கட்டி முடிக்கப்படும் வரை அரசு பள்ளியில் பயன்படுத்தாத பகுதியில் குடிசை கட்டி குடியிருக்கலாம் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார். இடிந்து விழுந்த வீட்டிற்கும் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதனால் தம்பதி நிம்மதி அடைந்தனர்.












Click it and Unblock the Notifications