ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 நிவாரணம்! மழை வெள்ள நிவாரணத்தை அறிவித்தது புதுச்சேரி அரசு
புதுச்சேரி: மழை வெள்ளம் காரணமாக புதுச்சேரி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், புதுச்சேரியில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.5000 நிவாரணமாக வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்திருக்கிறது என்றும் இதனால் கடுமையாக பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன எனவும் கூறிய அவர், மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார். அதேநேரம் வெள்ள இழப்பீடாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.5000 வழங்கப்படும் என்றும், பயிர்கள் பாதிக்கப்பட்டிருந்தால் ஹெக்டேருக்கு ரூ.30,000 நிவாரணமாக வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

கால்நடைகளை பொறுத்தவரை, மாடு உயிரிழந்திருந்தால் ரூ.40,000, இளங்கன்று உயிரிழந்திருந்தால் ரூ.30,000 வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். உயிரிழப்புகளை பொறுத்தவரை 4 பேர் கொண்ட குடும்பத்தில் உயிரிழப்பு ஏற்பட்டிருந்தால் அக்குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்றும், மழையால் சேதமடைந்த குடிசை வீடுகளுக்கு ரூ.20,000 மற்ற வீடுகளுக்கு ரூ.10,000 படகு சேதமடைந்திருந்தால் ரூ.10,000 வழங்கப்படும் என தெரிவித்திருக்கிறார்.
மழையின் தீவிரம்: வங்கக்கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று நேற்று அதிகாலை புதுச்சேரிக்கும், மாமல்லபுரத்திற்கும் இடையே கரையை கடந்தது. புயல் காரணமாக வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களை காட்டிலும், வட உள் மாவட்டங்களான கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் மிக மிக அதிக அளவில் மழை கொட்டி தீர்த்திருந்தது.
போக்குவரத்து துண்டிப்பு: மழை காரணமாக புதுச்சேரி-சென்னை இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பெரியகங்கணாங்குப்பம் பகுதியில் தேங்கியுள்ள மழை நீர் இன்னும் வடியாததால் புதுச்சேரிலிருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து புதுச்சேரிக்கும் மக்கள் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
அதேபோல விழுப்புரம் மாவட்டத்தில் அரசூர் எனும் பகுதியில் தேங்கியுள்ள மழை நீர் காரணமாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருக்கிறது. சாலை போக்குவரத்து மட்டுமல்லாது ரயில் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டிருக்கிறது. தென் மாவட்டங்களிலிருந்து விழுப்புரம் வழியாக சென்னை எழும்பூருக்கு வரும் ரயில்கள் காட்பாடி, ராணிப்பேட்டை வழியாக திருப்பி விடப்பட்டிருக்கின்றன.
முதல்வர் ஆய்வு: வெள்ளம் பாதித்த பகுதிகளில் புதுவை முதல்வர் ரங்கசாமி ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் மேற்குறிப்பிட்ட நிவாரண உதவியை அறிவித்துள்ளார். மழை குறித்து பேசிய அவர், கடந்த 30 ஆண்டுகளில் இதற்கு முன்னர் இது போன்ற மழையை புதுச்சேரி மக்கள் பார்த்ததில்லை என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications