கொரோனா.. புதுச்சேரியில் கட்டுப்பாட்டு மையம் திறப்பு.. மாஸ்க்கை பதுக்கினால் நடவடிக்கை!
புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு குறித்த சந்தேகங்களுக்கு 24 மணி நேரமும் செயல்படக்கூடிய 104 என்ற இலவச கட்டுப்பாட்டு மையம் தொடங்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை இயக்குநர் மோகன் குமார் தகவல். மேலும் தனியார் மருந்தகங்களில் முகக் கவசங்களை அதிக விலைக்கு விற்பனை அல்லது பதுக்கினால் கடும் நடவடிக்கை எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக நாடுகளை பெரிதும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை உறுதி செய்துள்ளது. இதுவரை 29 பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனிடையே புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க புதுச்சேரி அரசின் சுகாதாரத்துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் வெளிநாடு பயணம் மேற்கொண்டு புதுச்சேரி திரும்பிய 9 பேரை சோதனை செய்ததில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது.

இருப்பினும் 2 பேர் ஜிப்மர் மருத்துவமனையிலும், கோரிமேடு காசநோய் மருத்துவமனைகளில் 2 பேரும் சந்தேகத்திற்கு இடமான வகையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் கூறுகையில், கொரோனா பாதிப்பு குறித்த சந்தேகங்களுக்கு 24 மணி நேரமும் செயல்படக்கூடிய 104 என்ற இலவச தொலைபேசி மையம் தொடங்கப்பட்டுள்ளது. தேவையான அளவு முகக்கவசம் அரசிடம் இருப்பு உள்ளது. தனியார் மருந்தகங்களில் முகக்கவசங்களை அதிக விலைக்கு விற்பனை அல்லது பதுக்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுச்சேரி விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையம், காரைக்கால் துறைமுகம் ஆகியவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. சளி, இருமல் இருப்பவர்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் திருமண நிகழ்ச்சி, கோவில் திருவிழாக்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications