புதுச்சேரியில் மதுபானங்கள் விலை இன்று முதல் அதிரடியாக உயர்வு.. டாஸ்மாக் பிரியர்கள் அறிய வேண்டியவை
புதுச்சேரி: தமிழ்நாட்டை ஒட்டியுள்ள யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் என்ஆர் காங்கிஸ்- பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு நீண்ட காலத்திற்கு மதுபானங்கள் விலை கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மதுபானங்கள் விலை உயர்வு புதுச்சேரியில் இன்று முதல் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இதன்படி பீருக்கு ரூ.10 வரையிலும், குவார்ட்டர் மதுப்பாட்டில் ரூ.6 முதல் ரூ.30 வரையும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை விட புதுச்சேரியில் மதுபானங்கள் விலை மிகவும் குறைவு ஆகும். புதுச்சேரியை மினி கோவா என்று பலரும் அழைப்பார்கள். ஏனெனில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களை ஒப்பிடும் போது, புதுச்சேரி மாநிலத்தில் மதுவகைகள் தரமானதாகவும், குறைந்த விலையிலும் இருப்பது தான் காரணம் ஆகும். இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் இருந்து மதுப்பிரியர்கள் அதிக அளவில் புதுச்சேரிக்கு வருகிறார்கள். அவர்கள் விரும்பிய மதுபானங்களை வாங்கி அருந்துகின்றனர். இதனால் புதுச்சேரி அரசுக்கு கணிசமான வருவாய் மது வருவாயில் இருந்து கிடைத்து வருகிறது.

புதுச்சேரியில் தமிழ்நாட்டை போல் இல்லை.. அங்கு ஏராளமான தனியார் மதுபானக்கடைகள் உள்ளன. அரசுக்கு மதுபானங்கள் விற்பனைக்கு பதில் கலால் வரி மற்றும் இறக்குமதி வரை கிடைக்கிறது. புதுச்சேரி அரசு நிர்வாகத்திற்கு மதுபானங்கள் மூலம் கிடைக்கும் வருவாய் முக்கிய இடத்தில் உள்ளது.
இந்நிலையில் புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் பாஜக கூட்டணி அரசு, கடந்த மார்ச் மாதம் பட்ஜெட்டின் போது பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகள் வெளியிட்டது. இந்த நலத் திட்டங்களை செயல்படுத்த அரசுக்கு கூடுதலாக சுமார் ரூ.500 கோடி தேவை என்கிற நிலை ஏற்பட்டது. ஆனால் அதற்கு நிதி அரசிடம் போதிய அளவு இல்லை. அதனால் அரசின் வருவாயை பெருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, முதல்வர் ரங்கசாமி தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் புதுவை மக்களுக்கு சுமையின்றி, அரசின் வருவாயை பெருக்க முடிவு செய்தனர். அதையடுத்து மது வகைகளுக்கு கலால் வரி, மதுக் கடைகளுக்கு உரிம கட்டணம், நில வழிகாட்டி மதிப்பு, ஆகியவை உயர்த்தப்படுகிறது.
இதன்படி, மதுபானங்களுக்கான கூடுதல் கலால் வரி விதிப்பு குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி சாதாரண குவார்ட்டர் மது பாட்டிலுக்கு ரூ.6 முதல் உயர் ரக பாட்டிலுக்கு ரூ.30 வரை விலை உயர்கிறது. 750 மி.லி கொண்டு முழு பாட்டிலுக்கு ரூ.24 முதல் ரூ.120 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. பீருக்கான விலை ரூ.5 முதல் ரூ.10 வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது புதுச்சேரியில் பிராந்தி, விஸ்கி, ஒயின் உள்ளிட்ட மதுபானங்கள் விலை லிட்டருக்கு ரூ.50 முதல் ரூ.325 வரை உயர்தப்பட்டிருக்கிறது. பீர் வகைகள் ரூ.30 வரை விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் உடனே அமலுக்கு வந்துள்ளது. இந்த விலை உயர்வு மதுபானங்களின் வகைகளை பொறுத்து மாறுபடுகிறது.












Click it and Unblock the Notifications