சைக்கிளை நிறுத்தி விட்டு.. நைஸாக நடந்து வந்து.. அடப்பாவி இப்படியும் ஒரு திருடனா!
புதுச்சேரி: நாட்டில் நடைபெறும் பெரும்பாலான கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்களில் குற்றவாளிகளை சிசிடிவி கேமராக்கள் உதவியுடன் போலீசார் கைது செய்து வருகின்றனர். ஆனால் குற்றவாளிகளை காட்டி கொடுக்கும் சிசிடிவி கேமராக்களையே திருடும் சம்பவம் புதுச்சேரியில் அரங்கேறி உள்ளது.
விதம் விதமான திருடர்களை நாடு பார்த்திருக்கிறது. பைக்குகளை மட்டும் குறி வைத்து திருடர்கள் உள்ளனர். குறிப்பாக புல்லட்களை மட்டும் குறி வைத்துத் திருடுவார்கள் சிலர். இதுபோல குறிப்பிட்ட சிலவற்றை மட்டும் திருடும் கும்பல் உள்ளது.
இந்த நிலையில் புதுச்சேரியில் ஒரு நூதன திருடனைப் பார்த்து போலீஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். புதுச்சேரி லாஸ்பேட்டை காவல்நிலையத்திற்கு பின்புறம் உள்ள பாரதி நகரில் 10 க்கும் மேற்பட்ட வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் அடுத்தடுத்து திருடுபோயுள்ளன.
பகல் நேரத்தில் சைக்கிளில் முகமூடி அணிந்து வரும் வாலிபர் ஒருவர், சைக்கிளை ரோட்டில் நிறுத்திவிட்டு, சர்வசாதாரணமாக அந்த பகுதியில் வீடுகளில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களை கழட்டி எடுத்துச்செல்கிறார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் லாஸ்பேட்டை காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் அந்த மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
அந்த வாலிபர் சிசிடிவி கேமராக்களை மட்டும் திருடுகிறாரா? அல்லது கேமராக்களை அகற்றிவிட்டு வீட்டில் இருக்கும் பொருட்களை திருடும் நோக்கில் இவ்வாறு செய்கிறாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருடர்களை கண்டுபிடிக்க உதவும் சிசிடிவி கேமராவையே திருடிச் சென்றால் என்ன செய்வது என பாரதி நகர் மக்கள் புலம்பி வருகிறார்கள். பொருட்களைத் திருடுபவர்களை விட இதுபோன்ற திருடர்கள்தான் மகா ஆபத்தானவர்கள் என்பதால் காவல்துறையினர் அந்த நபரை வலை வீசி தேடி வருகின்றனர்.