கிரண்பேடி பொய்யான தகவலை சொல்லி வருமானத்தை கெடுக்கிறார்.. நாராயணசாமி குற்றச்சாட்டு
புதுச்சேரி: புதுச்சேரி காவல்துறையில் உள்ள கீழ்மட்ட அதிகாரிகளுக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பொய்யான தகவலை சொல்லி புதுச்சேரி மாநிலத்துக்கு தேவையான வருமானத்தை கெடுத்து வருகிறார் என்று முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர் சந்தித்த முதல்வர் நாராயணசாமி, "குற்றவாளி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பச்சை மண்டலமாக இருந்த காரைக்கால் ஆரஞ்சு மண்டலமாக மாறியுள்ளது. புதுச்சேரி மாநிலத்துக்கு பல மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் குடியிருப்போர் தொடர்ந்து வருகின்ற ஒரு சூழ்நிலை இருக்கிறது.
அதனடிப்படையில் அவர்கள் புதுச்சேரி வந்தால் மருத்துவ பரிசோதனை செய்து வீட்டில் தனிமைப்படுத்தப்படுவார்கள். வெளிநாடுகளில் இருந்து 2,700 பேர் புதுச்சேரி வர மனு அளித்துள்ளனர். இது சம்மந்தமாக அவர்களின் விவரங்களை நான் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு எழுதி அவர்கள் அனைவரையும் விமானம் மூலம் அழைத்துவர கோரிக்கை வைக்க இருக்கிறேன்.
புதுச்சேரி மாநிலத்தில் மதுக்கடைகள் திறப்பது சம்மந்தமாக இப்போது எந்த முடிவும் எடுக்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறோம். ஆன்லைனில் மதுவை விற்பனை செய்ய தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டும். ஆனால் அதற்கு காலதாமதம் ஏற்படும். ஆகவே 17 ம் தேதிக்கு பிறகு மதுக்கடைகள் திறப்பது என்று அமைச்சரவையில் முடிவு செய்துள்ளோம்.
கொரோனா சமையத்தில் துரதிஷ்டவசமாக மத்திய அரசு ஒரு முடிவெடுத்து 2019-20, 2020-21 இரண்டு ஆண்டுக்கான நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியை முழுமையாக ரத்து செய்துள்ளது. இது தேவையற்ற ஒன்று. நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமையை மத்திய அரசு எடுத்துக்கொள்ளக்கூடாது.
மதுக்கடைகளை பொறுத்தவரை மிகப்பெரிய சர்ச்சை நம்முடைய மாநிலத்தில் இருக்கிறது. குறிப்பாக மதுவை வெளிமாநிலங்களில் இருந்து கொண்டுவருபவர்கள், மாநிலத்தில் மொத்த வியாபாரிகளிடம் இருந்து வாங்குபவர்கள் அதற்கு தேவையான கலால்வரியை கட்டிவிட்டுத்தான் வாங்குகின்றனர்.
அந்த நிதி முழுவதும் அரசுக்கு செல்கிறது. நானோ, அமைச்சர்களோ தவறு செய்பவர்களுக்கு துணை போக மாட்டோம். மதுக்கடை உரிமையாளர்கள் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எங்கள் அரசின் நோக்கம். ஆனால் மதுக்கடை உரிமையாளர்கள் மீது பொய் வழக்கு போடுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. புகார் கொடுத்த மதுக்கடை உரிமையாளர் மீதே வழக்குப் போடப்படுகிறது. இது காவல்துறையின் அதிகார துஷ்பிரயோகம். இரவு நேரங்களில் சென்று கைது செய்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. ஒருவர் கணக்கு காட்டவில்லை என்று காலக்கெடு கொடுக்காமல் அவரது கடையின் உரிமத்தை ரத்து செய்வது அதிகார துஷ்பிரயோகம். அதிகாரமே இல்லாமல் காவல்துறையினர், கலால்துறை விஷயத்தில் தலையிட்டு புதுச்சேரி மாநிலத்தில் மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர். இதற்கு மூலக்காரணம் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தான்.
காவல்துறையில் உள்ள கீழ்மட்ட அதிகாரிகளுக்கு கிரண்பேடி நேரடியாக தவறான உத்தரவிட்டு, மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு தெரியாமல் பொய்யான தகவலை சொல்லி புதுச்சேரி மாநிலத்துக்கு தேவையான வருமானத்தை கெடுத்து வருகிறார். புதுச்சேரியின் பல பகுதிகளில் வெளியே கள்ளத்தனமாக மது விற்கப்படுவதை வைத்து அளிக்கின்ற புகாரின்பேரில் மதுக்கடைகளின் உரிமத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம் என்று சொல்கின்றனர். ஆதரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்து கலால்துறை, காவல்துறை அதிகார துஷ்பிரயோகம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஆகவே தலைமைச் செயலாளர், கலால்துறை செயலர் ஆகியோருக் இதுவரை கலால்துறையில் நடைபெற்ற பிரச்சனைகள் தொடர்பாக ஒரு கடிதம் எழுதியுள்ளேன். அதில் விசாரணைகளை எல்லாம் கொரோனா தொற்று பிரச்சனை முடியும் வரை தள்ளி வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன்.
மாநிலத்தில் எல்லோருக்கும் வாய்ப்பு கொடுத்து முறையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் ஒருசிலரின் அதிகாரமில்லாத அதிகாரத்தில் முறையாக நடக்கின்ற செயல்பாடுகள் மீது குறையை சொல்லி மக்கள் மத்தியில் எங்கள் அரசுக்கு கெட்ட பெயரை உருவாக்க செயல்படுகின்றனர். அதற்கு காவல்துறையில் உள்ள ஒருசிலர் ஊதுகுழலாக இருந்து வருகின்றனர். இதை முறையாக தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கையை நாங்கள் எடுப்போம்.
சென்னையில் இன்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா.. வெறும் 12 நாளில் 3000 பேருக்கு பரவியது எப்படி
மத்திய அரசு மின்சாரத்துறையில் ஒரு சட்டத்திருத்தை கொண்டு வருகின்றனர். மாநில அரசை கலந்தாலோசிக்காமல் கரோனா தொற்றை எதிர்த்து போராடும் நேரத்தில் தனியார் நிறுவனங்களுக்கு மின்சாரத்தை விநியோகிக்கும் உரிமத்தை வழங்க இச்சட்டத்திருத்ததை கொண்டு வருகின்றனர். இது மாநில அரசுகள் ஒப்புதலுக்கானதல்ல. இச்சட்டத்தை எங்கள் மாநிலத்தில் முழுமையாக எதிர்க்கிறோம். கொரோனா தடுப்பு சூழலில் இச்சட்டத்தை கொண்டு வந்து மாநில அரசுகளின் உரிமையை பரிக்கக்கூடாது என்று பிரதமருக்கு நான் கடிதம் எழுத உள்ளேன்" என நாராயணசாமி தெரிவித்தார்.