மத்திய அரசு மே 31 க்கு பிறகு ஊரடங்கில் தளர்வு.. புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்
புதுச்சேரி: மத்திய அரசு மே 31 ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கில் தளர்வு அளிக்க உள்ளதாகவும், இதனால் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், புதுச்சேரியில் நேற்று வரை 51 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் தற்போது மண்ணாடிப்பட்டு பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுவனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. 40 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 12 பேர் குணமடைந்து வீட்டுக்கு சென்றுள்ளனர். கொரோனா சிறப்பு மருத்துவமனையாக உள்ள கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரியில் தூய்மைப்பணி சரியாக நடைபெறுவதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து வருகின்றது.
இதை மேம்படுத்துவது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து எனது தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது. மத்திய அரசு மேலும் தளர்வுகளை வரும் 31 ஆம் தேதி அறிவிக்க உள்ளது. இதனால் பெரிய பாதிப்புகள் வரும். மக்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே கொரோனாவை வெற்றி கொள்ள முடியும். எனவே தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்றார்.
சென்னையில் இருந்து சேலத்திற்கு விமானத்தில் சென்ற 6 பேருக்கு கொரோனா.. பயணிகள் ஷாக்!