புதுவையில் ஒரே நாளில் 9 பேருக்கு கொரோனா உறுதி.. சுகாதாரத் துறை அமைச்சர்
புதுச்சேரி: புதுச்சேரியில் ஒரே நாளில் தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 9 பேருக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலை நீடித்தால் புதுச்சேரியில் மற்றொரு கொரோனா மருத்துவமனை தேவைப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் எச்சரித்துள்ளார்.
சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், புதுச்சேரியில் நேற்று வரை கொரோனா தொற்றால் 46 பேர் பாதிக்கப்பட்டனர். அதில் 34 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களுடன் தொடர்பில் இருந்த 116 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில் ரெட்டியார்பாளையம், தருமபுரி, முத்தியால்பேட்டை பகுதிகளைச் சேர்ந்த 5 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களுக்கு கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழகம்
அதுபோல் புதுச்சேரியில் கொரோனா தொற்று உள்ள உறவினர் வீட்டுக்கு வந்த மரக்காணம் பகுதியை சேர்ந்த ஒரு கர்ப்பிணி பெண் உள்ளிட்ட தமிழகத்தைச் சேர்ந்த 4 பேருக்கு கரோனா தொற்று இருப்பதும் தெரியவந்தது. அவர்கள் ஜிப்மரில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் புதுச்சேரி பட்டியலில் இடம் பெற மாட்டார்கள்.

வருவாய்த் துறை
தமிழக பட்டியலில் இடம்பெறுவார்கள். எனவே புதுச்சேரியில் தற்போது வரை 51 பேர் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களில் 12 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். 38 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களால் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இதை தடுப்பது தொடர்பாக நேற்று சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினேன்.

வழக்குப் பதிவு
27 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து 4,090 பேர் புதுச்சேரிக்கு வரவுள்ளதாக இபாஸ் வாங்கியுள்ளனர். எந்த முகவரி கொடுத்து வந்துள்ளனரோ, அந்த முகவரியில் அவர்கள் உள்ளனரா? என்பதை நேரில் சென்று ஆய்வு செய்ய கூறியுள்ளேன். அவ்வாறு இல்லாமல் போலியாக இபாஸ் பெற்று வந்திருந்தால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்.

சுகாதாரத் துறை
தற்போது தினமும் 2, 3 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகிவருவதால் எதிர்காலத்தை நினைத்து பயம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்ந்தால் இன்னொரு 700 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு மருத்துவமனை தேவைப்படும். ஊரடங்கு கூடுதல் தளர்வு ஏற்படுத்தினால் வருவாய் மற்றும் காவல்துறைக்கு பொறுப்பு நீங்கிவிடும். ஆனால் சுகாதாரத்துறைக்கு பொறுப்பு அதிகரிக்கும் என்றார்.

கோயம்பேடு
சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் கூறுகையில், புதுச்சேரியில் இருந்து நாளை 28 பேர் பீகார் செல்ல உள்ளனர். பரிசோதனை செய்த பின்னர் அவர்களை அனுப்ப உள்ளோம். புதுச்சேரியில் நேற்று வரை 34 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இருந்தனர். இவர்களில் 18 சதவீதம் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள், 5 சதவீதம் கோயம்பேட்டைச் சேர்ந்தவர்கள், 15 சதவீதம் எம்.ஆர்.எப். தொழிலாளிகள், 13 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், 18 சதவீதம் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள், 5 சதவீதம் தமிழகத்தில் இருந்து வந்தவர்கள் 26 சதவீதம் பிற காரணங்களால் தொற்றுக்கு ஆளானவர்கள் என உள்ளது.

தொற்று
பிற காரணங்களால் தொற்றுக்கு ஆளாகுவதுதான் பீதியாக உள்ளது. இதில் கொரோனா நோயாளியின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் நெருக்கமான தொடர்பில் இருப்பவர்கள் இடம் பெற்றுள்ளனர். நோயாளியிடம் தனிமனித இடைவெளியை பின்பற்றாதது, முகக்கவசம் அணியாதது, கிருமி நாசினி பயன்படுத்தாது ஆகியவைகள்தான் இவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளதற்கு காரணம்.

கிராமப்புறம்
34 நோயாளிகளில் ஆண்கள் 74 சதவீதமும், பெண்கள் 26 சதவீதமும் உள்ளனர். 16 முதல் 60 வயதிற்குட்பட்ட நோயாளிகள் 90 சதவீதம் பேர் ஆவார்கள். 5,7 மற்றும் 9 வயதுகளில் 3 சிறுவர்கள் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். கிராமப்புறத்தைவிட, நகர்ப்புறத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் என மோகன்குமார் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications