வாவ்.. ராட்சத பொம்மைகள்.. அசத்தும் பிரெஞ்சு கலைஞர்கள்.. புதுச்சேரியில்!
புதுச்சேரி: பிரான்ஸ் நாட்டு நாடகக் கலைஞர்களின் பொம்மலாட்ட நிகழ்ச்சிக்காக புதுச்சேரியில் ராட்சத பொம்மைகள் தயாரிக்கப்பட்டு, ஒத்திகை பார்க்கப்பட்டு வருகிறது. இவற்றை சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.
Recommended Video
பிரெஞ்சு கலாச்சாரத்தின் தழுவலை இன்று வரை புதுச்சேரியில் பார்க்கலாம். பிரான்ஸின் மடியில் பல காலம் இருந்த பூமிதான் புதுச்சேரி. இன்று வரை பிரெஞ்சு கலாச்சாரமும், புதுவையின் தமிழ்க் கலாச்சாரமும் கலந்து மக்களை மகிழ்வித்து வருகிறது.
இந்த நிலையில் அழிந்து கொண்டிருக்கும் கலைகளுக்கு உயிர் கொடுக்கும் முக்கிய வேலைகளில் புதுச்சேரி இறங்கியுள்ளது.
பொம்மலாட்டக் கலை
பொம்மலாட்டத்தை அழிவிலிருந்து மீட்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி அலையன்ஸ் பிரான்ஸே திரையரங்க குழுவினர் பெரிய அளவிலான பொம்மைகளை தயாரித்து வரும் 20 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை புதுச்சேரியில்
மக்கள் கூடும் இடங்களில் நாடகங்கள் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
30 பேர் கொண்ட குழு
பிரான்ஸ் மற்றும் இந்திய நாட்டை சேர்ந்த சுமார் 30 பேர் கொண்ட குழுவினர் இதற்கான பொம்மை தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பொம்மை வேடம் அணிந்து நாடகம் நடத்த பல்வேறு கல்லூரிகளில் படித்த நாடகத்துறை மாணவர்கள் தீவிர பயிற்சி எடுத்து வருகின்றனர். கடந்த 5 ஆம் தேதி தொடங்கிய பயிற்சி வரும் 20ம் தேதி நிறைவடைகிறது.
ராட்சத பொம்மைகள்
பெரிய அளவிலான பொம்மைகள் வழியாக சமூகத்திற்கு நல்ல விஷயங்களை கொண்டுசென்று சேர்க்க வேண்டும் என்பதே இந்த நாடக விழாவின் முக்கிய நோக்கம். இந்த பொம்மைகளை சிறிய இடங்களில் வைத்து நாடகம் நடத்த முடியாது என்பதால் கடற்கரை சாலை, கிராமப்புற மந்தைவெளி, சந்தை திடல் போன்றவற்றில்தான் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.
வித்தியாசமான பொம்மைகள்
இந்த பொம்மைகள் நாடகத்தை மட்டும் வெளிப்படுத்துவதாக அல்லாமல், மக்களோடு மக்களாக கலந்து அவர்களுடன் விளையாடி, உரையாடி அவர்களின் அழுத்தத்தை குறைக்கும் நோக்கோடும் தனிமனித உணர்வை போக்கும் என கலைஞர்கள் தெரிவித்துள்ளனர்.