விஜய் ஆசைக்கு ‘வேட்டு’ வைத்த ரங்கசாமி.. புதுச்சேரியில் தவெக உடன் கூட்டணி கிடையாது.. அதிரடி முடிவு!
புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலிலும் விஜய் தலைமையிலான தவெக, விசில் சின்னத்தில் களமிறங்குகிறது. அங்கு என்.ஆர்.காங்கிரஸ் உடன் விஜய் கூட்டணி அமைக்கக்கூடும் என்ற பேச்சுகள் எழுந்து வந்த நிலையில், இன்று பாஜக உடன் தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்துள்ளார் ரங்கசாமி. இதன் மூலம் தவெக உடன் கூட்டணி இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் தேனீ ஜெயக்குமார், லட்சுமி நாராயணன், துணை சபாநாயகர் ராஜவேலு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆறுமுகம், பாஸ்கர், ரமேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெக இணைய உள்ளதா என்ற கேள்விக்கு பதிலளித்தார். அப்போது பேசிய அவர், "தேசிய ஜனநாயக கூட்டணியில் தவெக தலைவர் விஜய்யை சேர்ப்பது குறித்து தனக்கு தெரியாது. விஜய்யை நான் சந்தித்து பல மாதங்கள் ஆகிவிட்டது" எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் மத்திய அமைச்சரும் பாஜக மேலிடப் பொறுப்பாளருமான மான்சுக் மாண்டவியா, நிர்மல் குமார் சுரானா ஆகியோர் தலைமையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை இன்று மாலை நடைபெற்றது.
இந்தப் பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்த என்.ஆர். காங்கிரஸ் தலைவரும், முதலமைச்சருமான என். ரங்கசாமி, "பாஜக - என்.ஆர். காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடைபெற்றது. தேர்தல் தேதி அறிவித்த பிறகு அனைத்தும் சொல்கிறேன்" எனத் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தேர்தல் பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, "புதுச்சேரியில் என்.டி.ஏ. கூட்டணியில், 16 தொகுதிகளில் என்.ஆர். காங்கிரஸும், 14 தொகுதிகளில் பாஜகவும் போட்டியிடும். பாஜக வசம் இருக்கும் 14 தொகுதிகளில் அதிமுக, லட்சிய ஜனநாயக கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
லாட்டரி அதிபர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டினின் லட்சிய ஜனநாயகக் கட்சியை கூட்டணியில் சேர்த்துள்ளது பாஜக. விஜய் தலைமையிலான தவெகவின் தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளராக இருக்கும் ஆதவ் அர்ஜுனாவின் மைத்துனர் தான் லாட்டரி அதிபர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின். இவர் புதுச்சேரியை மையமாகக் கொண்டு அண்மையில் லட்சிய ஜனநாயகக் கட்சியை தொடங்கினார். இந்நிலையில் அக்கட்சி பாஜக - என்.ஆர். காங்கிரஸ் கூட்டணியில் இணைந்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டம் புதுச்சேரியில் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டங்களில் விஜய்யும் இரண்டாம் கட்டத் தலைவர்களும் திமுகவைக் கடுமையாக விமர்சித்து வந்தனர். ஆனால், என்.ஆர். காங்கிரஸ் - பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் புதுச்சேரியில் பேசிய விஜய், என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கவில்லை.
புதுச்சேரியில் விஜய் பேசும்போது 1977ல்தான் எம்.ஜி.ஆர் தமிழ்நாட்டில் ஆட்சியமைத்தார். அதற்கு முன்பாக, 1974லேயே புதுச்சேரியில் அ.தி.மு.கவின் ஆட்சி அமைந்தது. அவரை 'மிஸ்' பண்ணிவிடக்கூடாது என 'அலர்ட்' செய்ததே புதுச்சேரிதான் என்றார்.
தங்கள் கூட்டத்திற்கு காவல்துறை சிறப்பான பாதுகாப்பை அளித்ததாக என்.ஆர். காங்கிரஸ் அரசைப் பாராட்டினார் விஜய். "இங்கிருக்கும் அரசைப் பொறுத்தவரை, தமிழகத்தில் உள்ள திமுக அரசை போல இல்லை. வேறொரு கட்சி நடத்தும் நிகழ்ச்சிக்கு பாரபட்சமில்லாமல் பாதுகாப்பு அளித்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட புதுச்சேரி அரசுக்கும் முதலமைச்சருக்கும் நன்றி. இதைப் பார்த்தாவது தமிழ்நாட்டில் உள்ள திமுக அரசு கற்றுக்கொண்டால் நன்றாக இருக்கும் எனத் தெரிவித்தார்.
இதனால், புதுச்சேரியில் தவெகவின் தேர்தல் கணக்கு தொடர்பாக பல்வேறு யூகங்கள் எழுந்திருந்தன. இந்நிலையில் இன்று பாஜக - என்.ஆர்.காங்கிரஸ் - அதிமுக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளதால், தவெக இடம்பெற வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications