புதுச்சேரியில் ரேசன் அட்டைதாரர்களுக்கு ஹேப்பி! மானிய விலையில் ரேஷன் வழங்க முடிவு.. அசத்தும் ரங்கசாமி
புதுச்சேரி: நாளை 10ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் இலவச அரிசி வழங்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது.. இதற்கான பணிகளையும், குடிமை பொருள் வழங்கல் துறை, கான்பெட் மூலமாக வேகமாக செய்து கொண்டிருப்பதாக குட்நியூஸ் வெளியாகியிருக்கிறது.
புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.. முதல்வராக என்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி செயல்பட்டு வருகிறார். இலவச அரிசி திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட உள்ள நிலையில் கடந்த 2015ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட புதுச்சேரி இலவச அரிசி விநியோக விதிகளிலும் குடிமை பொருள் வழங்கல் துறை திருத்தம் கொண்டு வந்துள்ளது.

பச்சரிசி: அதன்படி, 10 கிலோ அரிசி, 5 கிலோ கோதுமை என்று இருந்ததை மாற்றி அமைத்து, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள சிவப்பு ரேஷன்தாரர்களுக்கு 20 கிலோ அரிசி, வறுமை கோட்டிற்கு மேல் உள்ள மஞ்சள் ரேஷன் கார்டுதாரர்களுக்கு 10 கிலோ இலவச அரிசி மாதந்தோறும் இலவசமாக வழங்கப்படும் என மாற்றப்பட்டுள்ளது... அதுமட்டுமல்ல, இந்த திட்டம் அரசு ஊழியர்கள் மற்றும் கவுரவ ரேஷன் கார்டுகளுக்கு இல்லை என்றும் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல, சமையல் எண்ணெய், துவரம் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும் ரேஷன் கடைகள் வழியாக மானிய விலையில், இனிவரும் காலங்களில் வழங்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. அதற்கேற்ப இலவச அரிசி திட்ட விதிகளில் சமையல் எண்ணை, இதர உணவு அத்தியாவசிய பொருட்கள் மானிய விலையில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என்றும், இதன் ஒருங்கிணைப்பு நிறுவனமாக கான்பெட் நிறுவனம் செயல்படும் என்றும் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
பொங்கல் : அதேபோல, தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு என்பது வழங்கப்பட்டு வரும்நிலையில், இந்த வருடமும் பொங்கல் தொகுப்புக்கு பதிலாக பயனாளிகளின் வங்கிக்கணக்கில் பணம் செலுத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது...
கடந்த வருடம் பொங்கல் பொருட்களுக்கு பதிலாக ரூ.500 வழங்க முதலில் அறிவிப்பு வெளியாகி, இந்த தொகை பொங்கல் பொருட்களுடன் சேர்த்து ரூ.1,000 ரொக்கம் வழங்கப்படும் என்று மாற்றி அறிவிக்கப்பட்டது. இந்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு ரூ.750 வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வங்கி கணக்கு: பொங்கல் பொருட்கள் தொடர்பாக முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் கடந்தவாரம் சொல்லும்போது கடந்த வருடத்தை போலவே, அனைத்து ரேஷன்தாரர்களுக்கும் ரூ.750 பொங்கல் பரிசு, பயனாளிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.. இந்த ரொக்க பரிசு 3.5 லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள் பயனடைவார்கள் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், இலவச அரிசி திட்டம் ஒவ்வொரு மாதமும் 10ம் தேதி முதல் 20ம் தேதிக்குள் செயல்படுத்திட பணிகள் வேகப்படுத்தப்பட்டு வருகிறது.. எனவே, நாளை அதாவது 10ம் தேதி முதல், மீண்டும் இலவச அரிசி வழங்க அரசு முடிவு செய்து, பணிகளை அம்மாநில அரசு வேகப்படுத்தியுள்ளது. அத்துடன், மானிய விலையில் ரேஷன் பொருட்கள் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலவச அரிசி: ரேஷன் கடைகளை முழுமையாக திறந்து மாதந்தோறும் இலவச அரிசி வழங்கும் பணி துவங்கப்படவில்லை என்பதால், பொங்கலையொட்டி நாளை 10ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் இலவச அரிசி வழங்க அரசு முடிவு செய்துள்ளது.. இதற்கு முதல்வரும் ஒப்புதல் வழங்கிய நிலையில், இதற்கான பணிகள், குடிமை பொருள் வழங்கல் துறை, கான்பெட் மூலமாக வேகமாக நடந்து கொண்டிருக்கிறதாம்.












Click it and Unblock the Notifications