பொங்கல் தொகுப்புக்கு பதில் ரேஷன் அட்டைகளுக்கு ரூ.750 வழங்கப்படும் - புதுச்சேரி முதல்வர் அறிவிப்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் பொங்கல் பரிசு தொகுப்புக்கு பதில் அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களின் வங்கி கணக்கில் ரூ.750 செலுத்தப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக என்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரங்கசாமி செயல்பட்டு வருகிறார். தமிழகத்தை போல் புதுச்சேரியிலும் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு என்பது வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பொங்கல் பரிசுத்தொகையுடன், ரொக்கப்பணம் என்பது வழங்கப்பட்டு வருகிறது. இதனால் வரும் 14ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மக்களின் எதிர்பார்ப்பு என்பது எகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை இந்த முறை ரூ.1000 ரொக்கப்பணம் வழங்கப்படவில்லை. மாறாக பொங்கல் பரிசுத்தொகுப்பு மட்டும் வழங்கப்பட உள்ளது. அதில் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு வழங்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு முறைப்படி வெளியாகி உள்ள நிலையில் ரேஷன் கடை வாரியாக மக்களுக்கு டோக்கன் வழங்கும் பணி தொடங்கி உள்ளது.
ஆனால் புதுச்சேரியில் இந்த பணிகள் எதுவுமே தொடங்காத நிலை இருந்தது. இதனால் புதுச்சேரி மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுமா? இல்லையா? என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் தான் அதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது.
அதன்படி புதுச்சேரியில் வரும் பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்புக்கு பதில் அனைத்து ரேஷன் அட்டைத்தாரர்களின் வங்கி கணக்கிலும் ரூ.750 செலுத்தப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இதன்மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு இல்லை என்பது உறுதியாகி உள்ளது.
முன்னதாக புதுச்சேரியில் கடந்த 2021ம் ஆண்டில் இருந்து பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, பச்சை பருப்பு, கடலைபருப்பு உள்பட 10 பொருட்களுடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. அதன்பிறகு கடந்த ஆண்டு வங்கி கணக்கில் ரூ.750 ரொக்கப்பணம் வழங்கப்பட்டது. அந்த வகையில் இந்த ஆண்டும் ரூ.750 மட்டும் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications