முடிந்தது கோடை விடுமுறை.. திறந்தன புதுவையில் பள்ளிகள்
புதுச்சேரி: புதுச்சேரியில் கோடை விடுமுறை முடிந்து இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. அரசு பள்ளிகளில் இன்று முதல் இலவச பாடபுத்தகங்கள் மற்றும் சீருடை கள் வழங்க பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து ஜீன் 3 ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது.

இதனால் மாணவர்களின் நலன் கருதி கோடை விடுமுறையை நீட்டிக்க வேண்டுமென பெற்றோர்கள், சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து கோடை விடுமுறையை 7 நாட்கள் நீட்டித்து அரசு உத்தரவிட்டிருந்தது.
பள்ளிகள் இன்று திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கோடை விடுமுறை முடிந்து புதுச்சேரியில் உள்ள அரசு மற்றும் தனியார் இன்று மீண்டும் திறக்கப்பட்டன.

முதல் நாளான இன்று மாணவர்கள் தங்களுடைய பெற்றோர்களுடன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு பள்ளிக்கு வருகை புரிந்தனர். பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் இனிப்புகளை வழங்கி உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

அதேபோல் 10 மற்றும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து அவர்களுக்கு சால்வை அணிவித்து ஆசிரியர்கள் கௌரவித்தனர். மேலும் அரசு பள்ளிகளில் இன்று முதல் இலவச பாடபுத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கவும் பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.
புதுச்சேரியில் விடுமுறை நீட்டிக்கப்பட்டு பள்ளிகள் திறப்பு இருந்தாலும் கூட தமிழகத்தைப் பொறுத்தவரை ஜூன் 3ம் தேதியே பள்ளிகள் திறக்கப்பட்டு விட்டன என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications