புதுச்சேரியில் முழுமையான சுய ஊரடங்கு.. ஊரே வெறிச்சோடியது.. பீச் காலி!
புதுச்சேரி: சுய ஊரடங்கு உத்தரவையொட்டி புதுச்சேரியில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. மேலும் மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.
Recommended Video
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

புதுச்சேரி மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், மதுபானக்கடைகள் வரும் 31 ஆம் தேதி வரை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் வரும் 31 ஆம் தேதி வரை புதுச்சேரி மாநிலத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிரதமர் நரேந்திர மோடி இன்று ஒரு நாள் சுய ஊரடங்கை மக்கள் கடைபிடிக்க வேண்டுமென வலியுறுத்தி இருந்தார். புதுச்சேரி மாநிலத்தில் பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று புதுச்சேரி மக்கள் சுய ஊரடங்கு உத்தரவுக்கு முழுவதுமாக ஆதரவு அளித்து, வீட்டைவிட்டு வெளியே வராமல் உள்ளனர்.

மேலும் புதுச்சேரி நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் பாலகம் மற்றும் மருந்தகத்தை தவிர்த்து அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளது. கடற்கரை சாலையில் வரும் 31 ஆம் தேதி வரை பொதுமக்கள் செல்ல தடை விதித்துள்ளதால், கடற்கரை சாலை வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் இன்று காலை கிறிஸ்துவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்படவில்லை.

அதேபோல் புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் சேவைகளும் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் வாகனப் போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் பாதுகாப்பு பணிக்காக புதுச்சேரி முழுவதும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications