டாஸ்மாக்கில் ரூ 2000 வாங்கிக்கச் சொன்னது உலகிலேயே பெரிய அறிவிப்பா இருக்கு.. தமிழிசை கிண்டல்
புதுவை: ரூ 2000 நோட்டை டாஸ்மாக்கில் வாங்கிக்க சொன்னதே உலகிலேயே பெரிய அறிவிப்பாக தெரியுது என புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 135 இடங்களில் வென்றது. ஆனால் பாஜகவோ 66 இடங்களிலும் மஜத 19 இடங்களிலும் வென்றது. இந்த தேர்தலில் 36 ஆண்டுகால வரலாற்று சாதனையை முறியடித்து ஆட்சியை தக்க வைக்க பாஜக முயற்சித்தது.

ஆனால் மக்கள் காங்கிரஸ் கட்சியை ஆதரித்தனர். இந்த நிலையில் இந்த தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடந்த சில நாட்கள் கழித்து கடந்த வெள்ளிக்கிழமை ரிசர்வ் வங்கி திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக ரிசர்வ் வங்கி கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி முதல் ரூ 500, 1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. அப்போது பணபுழக்கத்தால் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க புதிய ரூ 500, ரூ 2000, ரூ 200 நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன.
அது போல் 89 சதவீத ரூ 2000 நோட்டுகள் 2016 இல் புழக்கத்தில் விட்டதை அடுத்து 2018-2019 ஆம் ஆண்டு முதல் ரூ 2000 நோட்டுகள் அச்சடிப்பதையும் ஆர்பிஐ நிறுத்திவிட்டது. இந்த நிலையில் பணமதிப்பிழப்பு பிரச்சினைகள் குறைந்ததாலும் இதர ரூபாய் நோட்டுகள் போதுமான அளவில் புழக்கத்தில் இருப்பதாலும் ரூ 2000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது.
வரும் 23ம் தேதி முதல் செப்டம்பர் 30 வரை பொதுமக்கள் தங்கள் கைவசமுள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கியின் அலுவலகங்கள் அல்லது வங்கிக் கிளைகளில் ஒப்படைத்து, அவரவருக்குரிய வங்கிக் கணக்கில் வரவு வைத்துக் கொள்ளலாம் என்று ஆர்பிஐ தெரிவித்திருந்தது. இதை எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. கர்நாடகாவில் பாஜக சந்தித்த படுதோல்வியை கருத்தில் கொண்டே இந்த முடிவை பாஜக அரசு எடுத்துள்ளது.
எதற்காக ரூ 2000 நோட்டை அடித்தார்கள், எதற்காக இப்போது திரும்ப பெறுகிறார்கள். முதலில் முடிவு செய், பிறகு யோசி என்ற கோட்பாட்டை பிரதமர் மோடி கடைப்பிடித்து வருகிறார் என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்தன. இதுகுறித்து தமிழிசை சவுந்திரராஜனிடம் கேட்ட போது என் நோட்டும் வொயிட், என் கோட்டும் வொயிட், நான் எதற்காக கவலைப்பட வேண்டும் என கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில் ரூ 2000 நோட்டுகள் வாபஸ் என அறிவிக்கப்பட்ட நிலையில் டாஸ்மாக் கடைகளில் அந்த நோட்டுகளை வாங்கக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் அது போல் எந்த அறிவிப்பும் டாஸ்மாக் நிர்வாகம் வெளியிடவில்லை. ரூ 2000 நோட்டுகளை வாங்கிக் கொள்ளலாம் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருந்தார்.
அது போல் இந்த ரூபாய் நோட்டு வாபஸ் குறித்து முதல்வர் ஸ்டாலின் கூறுகையில் கர்நாடகா தேர்தலில் படுதோல்வியை மறைக்கும் ஒற்றை தந்திரமே ரூ 2000 நோட்டுகள் வாபஸ் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் புதுவை துணைநிலை ஆளுநர் மாளிகையில் மேற்கு வங்க மாணவ, மாணவிகளுடன் தமிழிசை சவுந்திரராஜன் கலந்துரையாடல் நடத்தினார்.
இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ரூ 2000 நோட்டுகளை டாஸ்மாக்கில் வாங்குகிறோம் என சொன்னதுதான் உலகிலேயே மிகப் பெரிய அறிவிப்பு. கர்நாடகா படுதோல்வியை மறைக்கவே மத்திய பாஜக அரசு ரூ 2000 நோட்டுகளை திரும்பப்பெறும் நடவடிக்கையை எடுத்துள்ளதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அதுகுறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. இதில் கருத்து சொன்னால் அரசியல் கருத்தாகிவிடும். நல்ல முயற்சிக்காகத்தான் எல்லாமே கொண்டு வரப்படுகிறது என்றார்.












Click it and Unblock the Notifications