வந்து 4 நாட்கள்தான் ஆகுது.. ஒவ்வொரு நகர்விலும் மக்களுக்கான ஆளுநர் என நிரூபிக்கும் தமிழிசை!
புதுவை: புதுவையில் வெள்ளம் பாதித்த பகுதிகளை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதன் மூலம் மக்களின் ஆளுநர் என்பதை நிரூபித்துவிட்டார்.
Recommended Video
புதுவையில் முதல்வர் நாராயணசாமிக்கும் துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடிக்கும் இடையே அதிகார போட்டி இருந்தது. இந்த நிலையில் பல கட்ட போராட்டங்களுக்கு மத்தியில் கிரண் பேடி ஆளுநர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
இதையடுத்து அந்தப் பதவிக்கு தெலுங்கானாவின் துணை நிலை ஆளுநராக இருந்த தமிழிசை சவுந்திரராஜன் நியமிக்கப்பட்டார். அவர் பதவியேற்றவுடன் தான் மக்களின் ஆளுநராக இருப்பேன். தான் அனைவருக்கும் பொதுவானவர் என்றும் பேட்டி அளித்திருந்தார்.
வெள்ளப் பாதிப்பு
இந்த நிலையில் எப்போதும் மக்களுடன் பழகுவதை விரும்பும் தமிழிசை சவுந்திரராஜன் மக்களால் தேர்வு செய்யப்பட்ட புதுவை அரசு இருக்கும் நிலையிலும் புதுவையில் கொட்டி தீர்த்த மழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டார். அவர் சோனாம்பாளையம், தேங்காய்த்திட்டு, வசந்த்நகர் உள்ளிட்ட பகுதிகளில் பார்வையிட்டார்.
கால்வாய்
பின்னர் மக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார். சோனாம்பாளையத்தில் கால்வாய் நிரம்பி வெள்ள நீர் சாலைகளில் வழிவதையும் பார்வையிட்டார். அது போல் முதல்வர் நாராயணசாமியும் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.
தமிழிசை
புதுவையில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் அரசு இருக்கும் போதிலும் பதவியேற்ற 4 நாட்களில் மருத்துவமனைகளில் ஆய்வு, கொரோனா தடுப்பூசி மையத்தில் ஆய்வு, அரசு அலுவலகத்தில் ஆய்வு என கலக்கி வரும் தமிழிசை தற்போது வெள்ள பாதிப்பு பகுதிகளையும் பார்வையிட்டு வருகிறார்.
செய்வாரா தமிழிசை?
இதன் மூலம் மக்களுக்கான ஆளுநராக இருப்பேன் என பதவியேற்றவுடன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதை தமிழிசை நிரூபித்துள்ளார். இதே போல் அவர் விருப்பு வெறுப்பு இல்லாமல் தொடர்ந்து மக்கள் பணியாற்ற வேண்டும் என்பதே அந்த யூனியன் பிரதேச மக்களின் எதிர்பார்ப்பாகும். செய்வாரா தமிழிசை!