புதுச்சேரியில் பந்த்.. பஸ் ஓடலை.. கடைகள் அடைப்பு.. இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்பு!
புதுச்சேரி: மத்திய அரசுக்கு எதிராக புதுச்சேரியில் தொழிற்சங்கங்கள் சார்பில் நடைபெற்று வரும் பந்த் போராட்டம் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச ஊதிய வரம்பை அதிகரிக்க வேண்டும், பொதுத்துறை நிறுவன விற்பனை மற்றும் பங்கு விலகலை கைவிட வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஐஎன்டியூசி, ஏஐடியுசி, எச்எம்எஸ், சிஐடியு உள்ளிட்ட 10 தொழிற் சங்கங்கள் சார்பில் இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் வேலை நிறுத்தப் போராட்டத்துடன் பந்த் போராட்டமும் நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கைவிடக்கோரியும், குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் இந்த பந்த் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இன்று காலை 6 மணிக்கு துவங்கியுள்ள பந்த் போராட்டம் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இதன் காரணமாக புதுச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து புதுச்சேரி நகரம் மற்றும் வெளியூர்களுக்கு செல்லும் தனியார் பேருந்துகள் முற்றிலுமாக இயக்கப்படவில்லை. ஆட்டோ, டெம்போ இயங்கவில்லை. தமிழக அரசு பேருந்துகள் மட்டும் குறைந்த எண்ணிக்கையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்படு வருகிறது.

திரையரங்குகளில் காலை, பிற்பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளன. இதேபோல் பெரிய மார்க்கெட், நேரு வீதி, காந்தி வீதி, காமராஜர் வீதி, குபேர் அங்காடி, நெல்லித்தோப்பு மார்க்கெட், முத்தியால்பேட்டை மார்க்கெட் ஆகிய பகுதியில் உள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் முற்றிலுமாக அடைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. தொழிற்சங்கங்கள் சார்பில் நகரின் பல்வேறு பகுதிகளில் மறியல் போராட்டங்களும் நடைபெற்று வருகிறது.

தொழிற் சங்கங்களின் பந்த் போராட்டம் காரணமாக புதுச்சேரியில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் புதுச்சேரி நகரம் மற்றும் கிராமப் பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications