புதுச்சேரியையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கணும்.. அதிமுக
புதுச்சேரி: தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக முதலமைச்சர் நாராயணசாமி அறிவிக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் விவசாயிகளை திரட்டி அதிமுக போராட்டத்தில் ஈடுபடும் என புதுச்சேரி அதிமுக சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் உள்ள காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக மாற்றப்பட்டு, தனிச்சட்டம் இயற்றப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தார்.

மேலும் இப்பகுதிகளில் புதிதாக ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை தொடங்குவதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்காது எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய சங்கங்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக சட்டமன்ற கட்சித்தலைவர் அன்பழகன், தமிழகத்தில் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு, காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கும் வகையில், சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்துள்ள தமிழக முதல்வருக்கு புதுச்சேரி அதிமுக சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.

தமிழக அரசை பின்பற்றி விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் காவேரியின் கடைமடை பகுதியான புதுச்சேரி மாநிலம் காரைக்காலை புதுச்சேரி அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். இல்லையென்றால் அதிமுக தலைமையின் அனுமதி பெற்று விவசாயிகளை திரட்டி புதுச்சேரி அதிமுக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், புதுச்சேரி சட்டசபையின் அதிகாரத்திற்கு உட்படாத ஒரு தீர்மானத்தை சட்டமன்றத்தில் கொண்டு வரக்கூடாது என துணைநிலை ஆளுநர் கிரண்பேடி முதல்வருக்கு எழுதியுள்ள கடிதம் குறித்து முதல்வர் நாராயணசாமி விளக்கம் அளிக்க வேண்டும்.

புதுச்சேரியில் நாளை கூடவுள்ள சிறப்பு சட்டமன்ற கூட்டம் எதற்கு கூட்டப்படுகிறது என்பது குறித்து அரசு இதுவரை தெரிவிக்கவில்லை. சட்டதிற்கு விரோதமான கூட்டத்தை முதல்வர் நாராயணசாமி கூட்டுவதாகவும் அன்பழகன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications