மோடி அய்யா.. மோடி அய்யா சோறு போடய்யா.. உருக உருக பாடிய புதுவை சிறார்கள்!
புதுச்சேரி: புதுச்சேரி மக்களுக்கு கொரோனா நிதியுதவி வழங்க வலியுறுத்தி, சிறுவர்கள் பாடல் மூலம் பிரதமா் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Recommended Video
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், கொரோனா வைரஸ் தாக்கம் குறையாததால் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், புதுச்சேரியில் வியாபார நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், மதுபானக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மேலும் புதுச்சேரி மாநிலத்தில் சுற்றுலா மற்றும் போக்குவரத்து துறை மூலம் வரும் வருமானமும் முற்றிலும் தடைபட்டுள்ளது.

இதனிடையே புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கும், ஏழை மக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும் ரூபாய் 995 கோடி நிவாரண நிதி வழங்க வேண்டுமென முதலமைச்சர் நாராயணசாமி தொடா்ந்து கடிதம் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் பிரதமர் மோடியிடம் வலியுறுத்தி வருகிறாா். ஆனால், புதுச்சேரிக்கு நிதி அளிப்பது தொடர்பாக மத்திய அரசிடமிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை.

இந்நிலையில் ஊரடங்கு அமலில் இருக்கும் சூழலில் நாங்கள் படும் கஷ்டங்களைப் பாருங்கள் என்றும், புதுச்சேரி மாநிலத்திற்கு தேவையான நிதியளித்து உதவ வேண்டுமெனவும் சிறுவர்கள் பாடல் மூலம் பிரதமா் மோடிக்கு கோரிக்கை விடுக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சிறுவர்கள் பாடியுள்ள அந்த வீடியோவில், மோடி அய்யா, மோடி அய்யா சோறு போடய்யா.. புதுச்சேரி மக்களுக்கு நிதி கொடுங்கய்யா.. வீட்டிலே இருக்கிறோம், நீங்க சொன்னதனாலய்யா.. நோயைவிடக் கொடுமை பசிதானய்யா, எங்களுக்குப் பிரதமர் நீங்கதான அய்யா. நாங்களும் உங்களோட மக்கள் தான அய்யா. 144 தடைபோட்டு, 21 நாள் அடைபட்டுள்ளோம், புதுச்சேரி மக்களுக்கு நிதி கொடுங்க என்று பாடியுள்ளனர். மனதை உருக வைப்பதாக உள்ளது இந்த சிறார்களின் குரல்.












Click it and Unblock the Notifications