அதிமுக இல்லாதிருந்தால் நாட்டில் பல கொடூர சட்டங்கள் நிறைவேறி இருந்திருக்காது.. திருச்சி சிவா
புதுச்சேரி: திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று திமுக சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. காஞ்சிபுரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
இதேபோல் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரியில் திமுக சார்பில் முத்தியால்பேட்டை பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு திருச்சி சிவா எம்பி பேசுகையில், நாடுமுழுவதும் தற்போது கொந்தளிப்பில் உள்ளது. மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து கொண்டுவந்த சட்டங்கள் அனைத்துமே கருப்பு சட்டங்கள்தான். மத்தியில் பாஜக பெரும்பான்மை பலத்தோடு இருந்தாலும், அதிமுகவின் ஆதரவால் குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேறியுள்ளது.

அதிமுக இந்த பழியை சுமந்தே தீர வேண்டும். அதிகாரத்தில் எந்த கட்சி அமர்ந்திருந்தாலும், மக்கள் நலத்திட்டங்களில் முன்னுரிமை இருக்க வேண்டும். ஆனால் அதிமுக பதவி மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுகின்றது. பாராளுமன்றத்தின் ஒரே கூட்டத்தொடரில் பாஜக 36 சட்டங்களை இயற்றியுள்ளது. காஷ்மீரில் 370 பிரிவு சட்டம் நீக்கப்பட்டபோது, அதை எதிர்த்து எழுப்பப்பட்ட முதல் குரல் திமுக தலைவர் ஸ்டாலினுடையது.
மக்களை வாழவைக்கவும், ஒடுக்கவும் சட்டம் பாராளுமன்றத்தில் மட்டும்தான் நிறைவேற்றப்படும். அதில் மக்களின் நலனுக்கு எதிராக சட்டம் வந்தால் அதனை எதிர்ப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்க வேண்டும். நீட் தேர்வு, முத்தலாக், என சத்தமில்லாமல் பல சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அதிமுக இல்லாதிருந்தால் நாட்டில் பல கொடூர சட்டங்கள் நிறைவேறி இருந்திருக்காது.

குடியுரிமை என்பது தனிமனிதனுக்கான அங்கீகாரம். சட்டம் அனைவருக்கும் சமமானது என்பதை அம்பேத்கர் உருவாக்கினார். குடியுரிமை திருத்தச்சட்டம் நீதிமன்றத்தால் தூக்கி எறியப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. ஜெயலலிதாவிற்கு முன்னாள் குனிந்ததைவிட டெல்லியில் அதிகமாக அதிமுகவினர் குனிகின்றனர்.
மதத்தின் பெயரால் குடியுரிமை அளிக்கக்கூடாது என்று வாதித்தோம். மற்றவர்களிடம் ஒளிந்து பேசும் கட்சி அல்ல திமுக. நேருக்கு நேர் பேசும் கட்சியை சேர்ந்தவர்கள். பாஜகவிற்கு அதிமுக மண்டியிட்டு ஆதரவு தருகிறார்கள். ஆனால் அங்கு அவர்களுக்கு மரியாதை இல்லை. குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நீதிமன்றம் சென்றுள்ளோம். மக்களுக்கு எதிரான, முரணான சட்டங்கள் நிறைவேற்றப்படும் போது அதனை தடுக்கும் அரணாக நீதிமன்றங்கள் உள்ளன. இதில் நிதீமன்றம் நம்பிக்கையை தரும் என திருச்சி சிவா பேசினார்.

இதனிடையே மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி வடக்கு மாவட்ட திமுக சார்பில் 200-க்கும் மேற்பட்ட திமுகவினர் தலைமை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், புதுச்சேரியில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை அமல்படுத்த மாட்டோம். புதுச்சேரியில் ஆட்சி கவிழ்ந்தாலும் இந்த சட்டத் திருத்தத்தை அமல்படுத்த மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications