‘லியோ’ டிக்கெட் தரலன்னா தியேட்டரே இருக்காது.. மிரட்டும் எம்.எல்.ஏ.. புதுச்சேரி தியேட்டர் ஓனர் புகார்
புதுச்சேரி: நாளை வெளியாகும்'லியோ' படத்திற்கு டிக்கெட் தராவிட்டால் தியேட்டரை உடைப்போம் என்று ஆளுங்கட்சி ஆதரவு எம்எல்ஏ நேரு மிரட்டுவதாக அவர் மீது தியேட்டர் உரிமையாளர் போலீசில் புகார் தந்துள்ளார்.
விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'லியோ' திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. நாளை காலை 9 மணிக்கு தமிழ்நாட்டில் முதல் ஷோ வெளியிடப்பட உள்ளது. 'லியோ' படத்திற்கான டிக்கெட் முன்பதிவு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கிய நிலையில், இந்த வாரம் முழுக்க பெரும்பாலான தியேட்டர்களில் டிக்கெட் விற்பனை முடிவடைந்துள்ளது.

புதுச்சேரியிலும், 'லியோ' படம் வெளியாகும் நிலையில் அங்கு காலை 7 மணி ஷோ திரையிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. பின்னர், விநியோகஸ்தர்கள் அனுமதி அளிக்காததால் முதல் ஷோ 9 மணிக்கு என மாற்றப்பட்டது. தமிழகத்தில் 'லியோ' படத்தின் முதல் காட்சி தொடங்கும் அதே நேரத்தில் புதுச்சேரியிலும் முதல் காட்சியை தொடங்க உள்ளது. லியோ டிக்கெட்டுகள் முதல் நாள் காட்சிகளுக்கு விற்றுத் தீர்ந்துள்ளன.
புதுச்சேரி திருவள்ளூவர் சாலையில் ஷண்முகா சினிமாஸ் இயங்கி வருகிறது. இந்த திரையரங்கின் உரிமையாளர் சுரேஷ், உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். அவரது புகார் மனுவில், திருவள்ளுவர் சாலையில் எனக்கு சொந்தமான ஷண்முகா திரையரங்கம் இயங்கி வருகிறது. குறிப்பாக பெரிய நடிகர்கள் நடித்த புதிய திரைப்படங்கள் வெளியாகும்போது இந்த தொகுதி எம்எல்ஏ நேரு அதிக டிக்கெட்டுகளை தருமாறு கேட்பார்.

எனது திரையரங்கில் பெரும்பாலும் ஆன்லைன் வழியாக டிக்கெட் விற்பனையாவதால், இதனை அவரிடம் தெரிவித்து, டிக்கெட் தர முடியாத நிலையைச் சொல்வோம். தற்போது லியோ திரைப்படம் வெளியாகவுள்ளது. மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி 'லியோ' திரைப்படத்திற்கு காலை 9 காட்சிக்கான டிக்கெட்டுகளை விற்றுள்ளோம்.
இந்தச் சூழலில் வழக்கம் போல் தொகுதி எம்எல்ஏ எனது நண்பர்களைத் தொடர்பு கொண்டு டிக்கெட் கேட்டு மிரட்டினார். காலை காட்சி டிக்கெட் தராவிட்டால் தியேட்டரை அடித்து நொறுக்குவோம் என அவரது ஆதரவாளர்கள் என்று சிலர் மிரட்டுகின்றனர். தியேட்டர் அருகே கூடி உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிக்கின்றனர். இதுதொடர்பாக சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
உருளையன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏவான நேரு, சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர். ஆளும் கட்சி ஆதரவு எம்.எல்.ஏவாக உள்ளார். 'லியோ' படம் நாளை ரிலீஸாகும் நிலையில், டிக்கெட் கேட்டு மிரட்டுவதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications