புதுச்சேரியில் 3 பேருக்கு கொரோனா அறிகுறி.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!
புதுச்சேரி: புதுச்சேரியில் மூன்று பேர் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள மத்திய அரசின் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 70 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநில அரசுகள் பள்ளி, கல்லூரி மற்றும் திரையரங்குகள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களை சில நாட்களுக்கு மூடுமாறு உத்தரவிட்டுள்ளனர்.
புதுச்சேரி மாநிலத்திலும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர மருத்துவ பரிசோதனைக்கு பிறகே வெளிமாநில மற்றும் வெளிநாட்டு பயணிகள் புதுச்சேரிக்குள் வருவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தலா 10 படுக்கைகள் கொண்ட கொரோனா தனி வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, அரசு மார்பக புற்றுநோய் மருத்துவமனை மற்றும் பிம்ஸ் தனியார் மருத்துவமனைகளில் தலா ஒருவர் வீதம் மொத்தம் மூன்று பேர் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மூவரும் கொரோனா வார்டில் வைக்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் இவர்களது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள மத்திய அரசின் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுகள் மூன்று நாட்களில் தெரியவரும் என சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் மூன்று பேர் சிகிச்சை பெற்று வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.