புதுச்சேரி - திண்டிவனம்; கடலூர் ரயில் பாதைகள் திட்டம் குறித்து ஆய்வு: மத்திய அமைச்சர் சோமண்ணா
புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கான ரயில்வே திட்டங்களுக்கு ரூ280 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது; மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரி யூனியன் பிரதேசம் புறக்கணிக்கப்படவில்லை என மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா தெரிவித்தார். மேலும் புதுச்சேரி- வில்லியனூர்- திண்டிவனம் ரயில் பாதை தொடர்பாக ரூ740 கோடி மதிப்பீட்டில் திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெறுவதாகவும் மத்திய இணை அமைச்சர் சோமண்ணா தெரிவித்தார்.
புதுச்சேரியில் என்ஆர்காங்கிரஸ்- பாஜக கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் என்ஆர்காங்கிரஸ், பாஜக இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வருவதில் டெல்லி மேலிடம் தீவிரமாக இருக்கிறது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தை முதல்வர் ரங்கசாமி புறக்கணித்ததும் பாஜக மீதான அதிருப்தியால்தான் எனவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் புதுச்சேரிக்கு மத்திய இணை அமைச்சர் சோமண்ணா வருகை தந்தார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சோமண்ணா, மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரி யூனியன் பிரதேசம் புறக்கணிக்கப்படவில்லை. புதுச்சேரியில் ரயில் திட்டங்களுக்கு மட்டும் ரூ280 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ93 கோடியில் புதுச்சேரி ரயில் நிலையத்தை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

காரைக்கால்- பேரளம் இடையேயான ரயில் பாதை அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெறுகிறது. புதுச்சேரி- வில்லியனூர்- திண்டிவனம் ரயில் பாதை திட்டம் சாத்தியமானதுதான். இது தொடர்பாக ரூ740 கோடி மதிப்பீட்டில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி யூனியன் பிரதேச சுற்றுலா துறைக்கு மட்டும் ரூ148 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இதேபோல வேளாண் துறை, கல்வி என ஒவ்வொரு துறைக்கும் நிதி ஒதுக் கீடு செய்துள்ளோம். மீண்டும் புதுச்சேரிக்கு வந்து தேவையான திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளோம்.

புதுச்சேரி- கடலூர் இடையேயான ரயில் பாதைக்கான நில அளவை செய்யப்பட்டு வருகிறது. இதற்கும் முழுமையான திட்ட அறிக்கை தயாரிக்கப்படுகிறது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு மத்திய அரசு நிதியே ஒதுக்கவில்லை என்பது எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரம். புதுச்சேரி - கடலுர் சாலையில் 4 வழி ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இதற்காக ஆகஸ்ட் 24-ந் தேதி டெண்டரும் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் சோமண்ணா தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications