தனியாரிடம் மின்சாரத்துறை! தாறுமாறாக மின்கட்டணம் உயரும்! மத்திய அரசுக்கு வைகோ எச்சரிக்கை!
புதுச்சேரி: புதுச்சேரி மின்சாரத் துறையைத் தனியார் மயமாக்கும் முயற்சியை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்.
கார்ப்பரேட்டுகளிடம் மின்சாரத் துறையை விடுவது என்பது பொது மக்களுக்கு மாபெரும் கேட்டினையே விளைவிக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.
இதன்மூலம் தாறுமாறாக மின்கட்டணம் உயரும்; வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு மறுக்கப்படும் என கவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கூறியிருப்பதாவது;

மின்சாரத் துறை
புதுச்சேரி மின்சாரத் துறையைத் தனியார் மயமாக்கும் வகையில் ஒன்றிய அரசு, புதுச்சேரி அரசுக்குப் பல நெருக்கடிகளைக் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொடுத்து வருகிறது. மின்சாரத் துறை என்பது ஒத்திசைவுப் பட்டியலின் (CONCURRENCE LIST)கீழ் வருவதால், மாநில அரசுகளுக்கு இந்தத் துறையில் முழுமையான அதிகாரம் உள்ளது.

மின் பகிர்வு நிறுவனங்கள்
யூனியன் பிரதேசங்களில் உள்ள மின் பகிர்வு நிறுவனங்கள் (DISCOMS) தனியார் மயமாக்கப்படும் என்று 2020 மே திங்களில் அறிவித்து அதற்கான முதல்கட்டப் பணிகளில் ஒன்றிய அரசு செயல்பட்டு வருகிறது. DISCOMS நிறுவனங்களை மீட்டெடுக்க, "ஆத்ம நிர்பார் பாரத் அபியான்" திட்டத்தின்கீழ் நிதி உதவி அளிக்க அந்நிறுவனங்களைத் தனியார் மயமாக்க வேண்டும் என்ற நிபந்தனையை ஒன்றிய அரசு விதிக்கிறது.

மின்கட்டணம் உயரும்
அரசின் தவறான இந்த நடவடிக்கை மக்கள் நலனுக்கு எதிரானது. புதுச்சேரி அரசில் மின்துறைக்கு 285 ஏக்கர் நிலம் உள்ளது; ஐந்து இலட்சம் சந்தாதாரர்கள் உள்ளனர்; 3,500 அரசு ஊழியர்கள் பணியாற்றிக் கொண்டுள்ளனர்; 35,000 குடிசை வீடுகளுக்கு இலவச மின்சாரம் கிடைக்கிறது. கார்ப்பரேட்டுகளிடம் மின்சாரத் துறையை விடுவது என்பது பொது மக்களுக்கு மாபெரும் கேட்டினையே விளைவிக்கும். இதன்மூலம் தாறுமாறாக மின்கட்டணம் உயரும்; வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு மறுக்கப்படும்; தொழிலாளர் உரிமைகள் பறிக்கப்படும்.

முயற்சியை கைவிடுக
எனவே, ஒன்றிய அரசும் புதுச்சேரி மாநில அரசும் இந்த முயற்சியைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அரசின் முறைகேடான இந்த நடவடிக்கைகளைக் கண்டித்து மின்துறைப் பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் தனியார்மய எதிர்ப்புப் போராட்டக் குழு மக்களை அணிதிரட்டி அறப்போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. அனைத்துக் கட்சியினரும் அவர்களுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்; மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் அவர்களுக்கு ஆதரவு அளிக்கிறது.
மின்துறையைத் தனியார் மயமாக்க முயற்சிக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கையை மிகவும் வன்மையாகக் கண்டிப்பதுடன், அந்த முயற்சியைக் கைவிட வேண்டும் என்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.












Click it and Unblock the Notifications