புதுச்சேரிக்கு சிறந்ததை பெற்றுத் தர பாடுபடுவேன்.. வைத்திலிங்கம் உறுதி
புதுச்சேரி: புதுச்சேரி லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் வெற்றி பெறுகிறார். சிறப்பாக செயல்படுவேன் என்று அவர் மக்களுக்கு உறுதி அளித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ஒரே ஒரு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரும், முன்னாள் சபாநாயகருமான வைத்திலிங்கம், தன்னை எதிர்த்து போட்டியிட்ட என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் கே.நாராயணசாமியைவிட ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
இதன்மூலம் புதுச்சேரி மக்களவை தொகுதியில் வைத்திலிங்கம் வெற்றி உறுதியாகியுள்ளது. இதனால் புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர்.

முன்னணி
வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பத்திலிருந்தே வைத்திலிங்கம்தான் முன்னணியில் இருந்து வந்தார். இந்தத் தொகுதி தற்போது என் ஆர்காங்கிரஸ் வசம் உள்ளது. அதை காங்கிரஸ் தட்டிப் பறித்துள்ளது.

நம்பிக்கை
இதனிடையே வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த வைத்திலிங்கம், புதுச்சேரி மக்கள் ராகுல் காந்தி மற்றும் ஸ்டாலின் மீது வைத்திருந்த நம்பிக்கையை வாக்கு எண்ணிக்கை முடிவுகள் காட்டுகிறது.

போன தடவையை விட
அகில இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலைவிட கூடுதல் இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பாராளுமன்றத்தில் சிறந்த எதிர்கட்சியாக காங்கிரஸ் கட்சி செயல்படும். புதுச்சேரி மாநிலத்திற்கு தேவையான நீதியை பெற்றுத் தருவதில் முன்னெடுப்பேன். மத்தியில் பாரதிய ஜனதா கட்சி அதிக இடங்களை பெற்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்றார்.

என் ஆர் காங்கிரஸ்
புதுச்சேரியில் என். ஆர். காங்கிரஸ் கட்சியின் பிடி தளர்ந்திருப்பது அக்கட்சியினரை அதிர வைத்துள்ளது. சட்டசபை இடைத் தேர்தலிலும் கூட அக்கட்சி தோல்வியுற்று, திமுக வெற்றி பெற்றுள்ளது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications