இந்த சண்டை எப்ப முடியும்.. அப்பீல் செய்ய கிரண் பேடிக்கு காசு தர மாட்டோம்.. நாராயணசாமி!
புதுச்சேரி: புதுச்சேரியில் ஆளுநர் கிரண்பேடியின் அதிகாரத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டிருக்கிறது. இந்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய ஆளுநர் கிரன் பேடிக்கு புதுச்சேரி அரசு பணம் கொடுக்காது என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் அதிகாரம் ஆளுநருக்கா அல்லது மக்களால் தேர்வு செய்யப்பட அரசுக்கா என்ற கேள்வி நீண்ட நெடுங்காலமாக இருந்து வந்தாலும் கிரண்பேடி புதுச்சேரிக்கு துணை நிலை ஆளுனராக நியமிக்கப்பட்டதில் இருந்தே மிக தீவிரமாக வலுப்பெற்று வருகிறது.
அரசு நிர்வாகத்திலும், அன்றாட நடவடிக்கைகளிலும் ஆளுநர் கிரண் பேடி தலையிடுகிறார் என்று முதலமைச்சர் நாராயணசாமி தொடர்ந்து குற்றம்சாட்டிவந்தார். இந்த நிலையில், இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிவது தொடர்பான உத்தரவைக் கட்டாயமாக அமல்படுத்தும் நடவடிக்கையில் கிரண் பேடி நேரடியாக இறங்கினார்.
ரஜினியின் அவசர கடிதம்.. திமுகவின் 6 மாத பிளான்.. அடுத்தடுத்த அரசியல் திருப்பம்.. பின்னணி இதுதான்!
மோதல் உக்கிரம்
அதோடு சாலையில் பயணம் செய்வோரிடம் ஒரு போலிஸ் கான்ஸ்டபிள் சென்று ஹெல்மெட் ஏன் போடவில்லை என்று கேட்பதை போல கேட்கவும் செய்தார். இது மக்கள் மத்தியிலும் முகச்சுழிப்பை ஏற்படுத்தியது. ஆளுநரின் இத்தகைய நடவடிக்கைகளை தொடர்ந்து பிரச்சினை உச்சகட்டத்தை அடைந்தது. இதனால் முதல்வர் நாராயணசாமியும் அமைச்சர்களும் ஆறு நாட்களாக நடத்திய தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆறு நாட்களாக நடந்த தர்ணா போராட்டம், இரு தரப்புக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
கோர்ட்டில் வழக்கு
இதே போன்று டெல்லி துணைநிலை ஆளுநருக்கும் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கும் இடையே நடைபெற்று வந்த அதிகாரப் போட்டியில் ஆளுநரின் அதிகார எல்லைகள் குறித்து, உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது. துணைநிலை ஆளுநர் விரோதப் போக்கைக் கண்டித்த உச்ச நீதிமன்றம், அந்த தீர்ப்பில் துணைநிலை ஆளுநரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் அரசியல் சட்ட வரையறைகளுக்குட்பட்டு இணக்கத்துடன் நடந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது. இதனையடுத்து டெல்லி துணைநிலை ஆளுநர் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவு ஏன் புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கும் பொருந்தாது என்ற கேள்விகள் அரசியல் அரங்கில் எழுந்தது.
லட்சுமி நாராயணன் போட்ட வழக்கு
நிலைமை இப்படி நீடிக்கையில் 2017-ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகம் புதுச்சேரி மாநில அரசின் அன்றாட நடவடிக்கைகளை பரிசீலிக்கும் வகையில் துணைநிலை ஆளுநருக்கு அளித்திருந்த சிறப்பு அதிகாரங்களை ரத்து செய்ய வேண்டும் என முதல்வரின் நாடாளுமன்ற செயலரான லட்சுமி நாராயணன் எம்எல்ஏ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதிரடி தீர்ப்பளித்த ஹைகோர்ட் பெஞ்ச்
இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக்கிளை முதல்வரின் அதிகாரத்திலும், அரசின் அன்றாட அலுவல்களிலும் தலையிடவும், கோப்புகளை பார்வையிட்டு அதிகாரிகளுக்கு நேரடியாக உத்தரவிடவும் துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று தீர்ப்பளித்தது. மேலும், புதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் நடவடிக்கைகளில் தலையிடும் வகையில் துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் உண்டு என்ற மத்திய அரசின் அறிவிப்பும் ரத்து செய்யப்படுகிறது என்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மேல் முறையீடு
இந்த உத்தரவை எதிர்த்து ஆளுநர் மேல் முறையீடு செய்ய அமைச்சரவையின் ஒப்புதல் தேவை என்ற நிலையில் உள்துறை அமைச்சகத்தின் ஒப்ப்புதலோடு மேல் முறையீடு செய்யலாமே என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஜனநாயகத்தைக் காப்பாற்றியிருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் எல்லா அதிகாரமும் உண்டு என்பதை உறுதி செய்திருக்கிறார்கள். அதில் மேல் முறையீடு செய்வதற்கு எதுவும் இல்லை.
சொந்த செலவில் செய்யட்டும்
தனிப்பட்ட முறையில் மேல்முறையீடு செய்வதற்கு கிரண் பேடிக்கு அதிகாரம் உள்ளது. அதற்கு அவர் தனது சொந்தப் பணத்தை செலவு செய்யலாம். துணை நிலை ஆளுநராக அவர் முதலீடு செய்ய வேண்டுமென்றால் அதற்கு அரசின் அனுமதி வேண்டும். அதற்கான அனுமதியையும், நிதியையும் நாங்கள் ஒதுக்கித் தர மாட்டோம்" என்று கூறினார்.