மத்திய அரசுக்கு ஜால்ரா அடிக்க மாட்டோம்… கமல்ஹாசன் பிரச்சாரம்
புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத் தரப்படும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் புதுச்சேரி தொகுதியில் போட்டியிடும் டாக்டர் சுப்பிரமணியனை ஆதரித்து கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

மேலும், புதுச்சேரிக்கு என தனித் தேர்தல் அறிக்கையை கமல்ஹாசன் வெளியிட்டார். அதன்படி, விவசாய தொழிலாளர்களுக்கு தனிவாரியம் அமைக்கப்படும். அரசின் அனைத்து வேலைவாய்ப்புகளிலும் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கப்படும்
சிறப்பு பொருளாதார மண்டலம் அமைத்து 2.25 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத்தரப்படும்; கடன் சுமையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுச்சேரியில் லோக்பால் சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். விவசாய தொழிலாளர்களுக்கு தனி வாரியம்; தனி கல்வி வாரியம் அமைக்கப்படும்
பிராந்திய திட்ட குழுக்களின் மூலம் 4 பிராந்தியங்களிலும் சமமான வளர்ச்சி உருவாக்கப்படும். புதுச்சேரியில் இருந்து சென்னை, தூத்துக்குடிக்கு பயணிகள் கப்பல் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன .
இதனைத் தொடர்ந்து பேசிய கமல்ஹாசன், அரசியல்வாதிகளை கண்டு எழுந்த குமுறலில் உருவானதுதான் மக்கள் நீதி மய்யம் என்றார்.
படித்தவர்கள் எல்லா இனத்திலும் இருக்கிறது என நம்புகிறது மக்கள் நீதி மய்யம் என்றும், நாங்கள் கொடுத்த வாக்குறுதிகள் அள்ளி வீசியது அல்ல; வடிகட்டி தயாரிக்கப்பட்டுள்ளது எங்கள் தேர்தல் அறிக்கை எனவும் விளக்கம் அளித்தார்.
புதுச்சேரியும் தமிழகம் தான், தனித்தன்மை வாய்ந்த தமிழகம் என்றும் மத்திய அரசுக்கு ஜால்ரா அடிக்க மாட்டோம் எனவும் கூறினார் .












Click it and Unblock the Notifications