பல மணி நேரத்திற்கு பின்.. மீண்டும் தொடங்கப்பட்ட வாக்கு எண்ணிக்கை.. விராலிமலையில் என்னதான் நடக்கிறது
புதுக்கோட்டை: விராலிமலை தொகுதியில் மின்னணு இயந்திரத்தில் நாடா காணவில்லை என்ற புகார் காரணமாக நிறுத்தப்பட்ட வாக்குப்பதிவு தற்போது மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. தற்போது வரை பெரும்பாலான இடங்களில் ஆறு அல்லது ஏழு சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைடைந்துள்ளது.
ஆனால், சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் போட்டியிட்ட விராலிமலை தொகுதியில் இரண்டு சுற்று வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்டுள்ளன. திமுக மற்றும் அதிமுக முகவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதால் வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
வாக்கு எண்ணிக்கை மையத்தில் 6ஆம் நம்பர் மேசையில் இருந்த மின்னணு ஓட்டு பெட்டியில் நாடா இல்லை என்றும் சில இயந்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ள எண்கள் தவறாக இருப்பதாகவும் கூறி திமுக, அமுமுக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் தேர்தல் அதிகாரிகளிடம் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மேலும், வாக்கு எண்ணிக்கை இயந்திரத்தில் உள்ள அளவீடுக்கும் வாக்கு பதிவான அளவிற்கு மன வித்தியாசம் அதிகமாக இருப்பதாகவும் ஒரு சில வாக்கு இயந்திரங்களில் சீல் உடைக்கப்பட்டு இருப்பதாகவும் குற்றஞ்சாட்டினர். இதில் திமுக மற்றும் அதிமுக உறுப்பினர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
"சிக்ஸர்" அடித்த ஸ்டாலின்.. 10 வருட "வெயிட்டிங்கும்".. 10 "சக்ஸஸ்களும்".. தனிப்பெரும் தலைவரானார்..!"
இதையடுத்து இரண்டு சுற்றுகளில் பதிவான வாக்குகள் மட்டுமே எண்ணப்பட்ட நிலையில், விராலிமலை சட்டமன்றத் தொகுதி வாக்கு எண்ணிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில், பல மணி நேரத்திற்கு பிறகு தற்போது விராலிமலை தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது,
புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலை தவிர மற்ற 5 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுக முன்னணியில் உள்ளது.