புதுக்கோட்டை அருகே ஷாக்: துப்பாக்கி சுடும் பயிற்சியின்போது விபரீதம்.. சிறுவன் தலையில் பாய்ந்த குண்டு
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் துப்பாக்கிச் சுடும் பயிற்சியின் போது சிஐஎஸ்எஃப் வீரர் சுட்டதால் பயிற்சி மையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் வீட்டில் இருந்த சிறுவனின் மூளை பகுதியில் தோட்டா பாய்ந்தது. இந்த சம்பவத்தை அடுத்து துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்திற்கு மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
Recommended Video
புதுக்கோட்டையில் நார்த்தாமலை அருகே அம்மாசத்திரத்தில் துப்பாக்கி பயிற்சி மையம் உள்ளது. இந்த மையத்தில் துணை ராணுவ வீரர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுவர். அந்த வகையில் இன்றைய தினம் சிஐஎஸ்எஃப் வீரர்கள் துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு வீரர் தனது பயிற்சியை மேற்கொண்டார்.
அப்போது அவரது துப்பாக்கியிலிருந்து 2 தோட்டாக்கள் சுமார் ஒன்றரை கிலோமீட்டர் போய் விழுந்தது. அதில் ஒன்று முத்து என்பவரின் வீட்டின் சுவற்றை துளைத்தது. மற்றொன்று வீட்டில் சாப்பிட்டு கொண்டிருந்த அவரது பேரன் புகழேந்தியின் (11) தலையில் பாய்ந்தது.

சரிந்த சிறுவன்
ரத்த வெள்ளத்தில் சரிந்த சிறுவன் மயங்கி விழுந்தான். இதையடுத்து வீட்டிலிருந்தவர்கள் பதறி அடித்துக் கொண்டு புகழேந்தியை புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆபத்தான நிலையில் சிறுவனுக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது. சிறுவனின் தலையில் தோட்டா பாய்ந்ததால் மூளை பகுதிக்கு செல்லும் நரம்புகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையிலிருந்து தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். துப்பாக்கி தோட்டா சிறுவன் தலையில் பாய்ந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அம்மாசத்திரம்
கொத்தமங்கலம்பட்டியை சேர்ந்த கலைச்செல்வனின் மகன் புகழேந்தி. இந்த சிறுவன் அம்மாசத்திரத்தில் உள்ள தனது தாத்தா முத்து வீட்டிற்கு சென்றிருந்த போது இந்த சம்பவம் நடைபெற்றது. இந்த துப்பாக்கிச் சூடு குறித்து கீரனூர் காவல் துறையினரும் வருவாய் துறையினரும் நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புகார்
இந்த துப்பாக்கி சுடும் பயிற்சி மையமானது பாதுகாப்பில்லாமல் இருப்பதாகவும் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து பல முறை நிர்வாகத்திற்கு புகார் அளித்தும் அவர்கள் இதுவரை எந்தவித நடவடிக்கையையும் எடுக்கப்படவில்லை என அந்த பகுதி மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

ஆட்சியர் உத்தரவு
இதையடுத்து பாதுகாப்பற்ற முறையில் உள்ள துப்பாக்கி சுடும் மையத்தை அகற்ற வேண்டும் என நார்த்தாமலையில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தனர். இதனால் புதுக்கோட்டை - திருச்சி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமு வந்திருந்தார். அப்போது அவர் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் செயல்படுவதற்கு அவர் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த துப்பாக்கிச் சுடும் மையம் பாதுகாப்பானதா என்பதை ஆய்வு செய்து பின்னர் அது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications