புதுக்கோட்டையை அதிர வைத்த ஜெகபர் அலி கொலை! கொலையாளிகள் வீட்டில் சிபிசிஐடி ரெய்டு! எதை தேடுறாங்க?
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் கனிமவள கொள்ளை குறித்து புகார் அளித்த சமூக செயற்பாட்டாளர் ஜகபர் அலி கொலை வழக்கில் கைதான ஐந்து பேரின் வீடுகளில் சிபிசிஐடி போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கொலை தொடர்பாக ஆவணங்கள் மற்றும் பிற தடயங்களை சேகரிப்பதற்காக சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா கோனாபட்டு அஞ்சல் வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்த கரீம் என்பவரின் மகன் ஜகபர் அலி. முன்னாள் அதிமுக ஒன்றிய கவுன்சிலரான இவர் சமூக ஆர்வலராகவும் உள்ளார். மேலும், திருமயம் தாலுகாவில் தொடர்ந்து கனிம வள கொள்ளை நடப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு ஆதாரங்களுடன் பல முறை மனு கொடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஜகபர் அலி பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது டிப்பர் லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயரிழந்தார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகார் கூறினர். ஜகபர் அலி தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் நான்கு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கனிம வளக் கொள்ளையை தடுத்ததால் அவர் கொலை செய்யப்பட்டதாக தமிழக எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் ஆகியோர் குற்றம் சாட்டியிருந்தனர். இந்த நிலையில், உடனடியாக இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் அவரது உடற்கூராய்வு முறையாக நடைபெறவில்லை என உறவினர்கள் குற்றம் சாட்டி இருந்தனர்.
இதை அடுத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப் படி ஜகபர் அலி உடலை தோண்டி எடுத்து எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. இந்த நிலையில் கொலை வழக்கில் கைதான கனிம வள கொள்ளையில் ஈடுபட்டதாக கூறப்படும் முருகானந்தம், காசிநாதன், ராசு, ராமையா தினேஷ் ஆகியோர் புதுக்கோட்டை மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். தொடர்ந்து இந்த வழக்கு புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் மன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில் குற்றவாளிகளை சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்யப்பட்டது.
தொடர்ந்து மூன்று நாட்கள் அவர்களை சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்த நிலையில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளில் சிபிசிஐடி போலீஸார் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கொலை தொடர்பாகவும் கனிமவள கொள்ளை தொடர்பாகவும் ஆவணங்களை திரட்டுவதற்காக போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications