போஸ் வெங்கட் இயக்கும் மா.பொ.சி பட பூஜை.. அறந்தாங்கியில் சூட்டிங்கை தொடங்கி வைத்த அமைச்சர்கள்!
புதுக்கோட்டை: திரைப்பட இயக்குநர், நடிகருமான போஸ் வெங்கட் எழுதி இயக்கும் மா.பொ.சி திரைப்பட பூஜை, அறந்தாங்கியில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் மெய்யநாதன், ரகுபதி ஆகியோர் கலந்துகொண்டு படப்பிடிப்பை தொடங்கி வைத்தனர்.
Recommended Video
'கன்னி மாடம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான போஸ் வெங்கட், பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியான 'கன்னி மாடம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதோடு சில சர்வதேச திரைப்பட விழாவிலும் விருதுகளை கைப்பற்றியது.
இந்நிலையில், போஸ் வெங்கட் எழுதி இயக்கும் மா.பொ.சி திரைப்படத்தை இயக்க உள்ளார். சிராஜ் தயாரிப்பில் எடுக்கப்படும் இந்தப் படத்தில், நடிகர் விமல் கதாநாயகனாக நடிக்கிறார்.
இதனிடையே, போஸ் வெங்கட் எழுதி இயக்கும் மா.பொ.சி திரைப்படத்தின் துவக்க விழா, அவரது சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள தனியார் திருமண மஹாலில் நடைபெற்றது. நடிகர் விமல் நடிக்கும் மா.பொ.சி திரைப்பட துவக்க விழாவில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மற்றும் சட்டத்துறை அமைச்சர் ஆகியோர் கலந்துகொண்டு படப்பிடிப்பை தொடங்கி வைத்தனர்.
விழாவில் செய்தியாளர்கள் சந்திப்பில் இயக்குநர் போஸ் வெங்கட் கூறும்போது, தமிழ் போராளி மாங்கொல்லை பொன்னரசு சிவஞானம் என்பதை சுருக்கி மா.பொ.சி என தலைப்பு வைத்துள்ளோம். தான் பிறந்த ஊரில் திரைப்படம் எடுக்க வேண்டும் என்பதே சிறுவயதிலிருந்து தனது ஆசை. தற்போது கதையும், களமும் அமைந்ததால் சொந்த மண்ணில் திரைப்படத்தை எடுப்பதில் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் திரைப்பட நடிகர் விமல், சரவணன் உள்ளிட்ட திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் படக்குழுவினர் பங்கேற்றனர்.
கன்னி மடம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான போஸ் வெங்கட், இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதையும் அறந்தாங்கியில் நடத்தவும், 30 அல்லது 40 நாட்களில் படத்தை முடிக்கவும் திட்டமிட்டுள்ளார். மா.போ.சி திரைப்படத்தில் சாயா கண்ணன் கதாநாயகியாகவும், சரவணன் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். படத்திற்கு சித்து குமார் இசையமைக்கிறார்.