ஸ்டாலின் நினைத்தால்.. அமைச்சர் ரகுபதி சொன்ன விஷயத்தை கவனிச்சீங்களா? இதுதான் பிளானா?
முதல்வர் ஸ்டாலின் நினைத்தால் மம்தா பானர்ஜியையும், ராகுல் காந்தியையும் கூட்டணியில் இணைப்பார் என அமைச்சர் ரகுபதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை: முதல்வர் ஸ்டாலின் நினைத்தால் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியையும், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியையும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியில் ஒன்று சேர்க்க முடியும் என்று அமைச்சர் ரகுபதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் இந்த முறை பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைத்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின். காங்கிரஸை விட்டு விட்டு 3வது அணி அமைப்பது கரை தேறாது என்பதையும் உறுதிபட கூறி வருகிறார்.
3வது அணி அமைக்காமல் எதிர்க்கட்சிகள்அனைவரும் ஒன்றுபட்டால் தான் பாஜகவை வீழ்த்த முடியும் என்று நம்பும் ஸ்டாலின், அதற்கான முன்னெடுப்புகளையும் செய்து வருகிறார்.

பீகார் துணை முதல்வர்
கடந்த மார்ச் 1ம் தேதி முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாள் விழா நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களில் இருந்து எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். அகில இந்தியக் காங்கிரசு கட்சித் தலைவரும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சித் தலைவரும் உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும் பீகார் மாநில துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பாஜகவிற்கு எதிர்ப்பு
அந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசும் போது, " எனக்கு அண்ணா போல பேச தெரியாது. கலைஞர் போல பேச தெரியாது. ஆனால் அவர்களை போல உழைக்க தெரியும். பொது வாழ்க்கை இப்படித்தான் இருக்குமென, வசந்த மாளிகைக்கு அனுப்பி வைப்பது போல சிறைக்கு அனுப்பி வைத்தார் கலைஞர். 70 வயது ஆகிவிட்டதை என்னால் நம்ப முடியவில்லை; மக்களுக்காக போராடும் நமக்கு கால நேரம் கிடையாது. 16 வயதில் மக்கள் பணியாற்றத் தொடங்கினேன். எனது பயணம் நீண்ட நெடிய பயணம். 2024 தேர்தலில் பாஜகவை ஒன்றிணைந்து வீழ்த்த வேண்டும். 2024 தேர்தலில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை விட, யார் ஆட்சி அமைக்க கூடாது என்பதே முக்கியம்" என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

தனித்து போட்டி
ஆனால் அடுத்த நாள் மார்ச் 2ம் தேதி 3 மாநில தேர்தல் முடிவுகள் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் வெளியானது. அதில் மேற்குவங்கத்தில் இடதுசாரிகள் ஆதரவுடன் போட்டியிட்ட காங்கிரஸ், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்தது. இடைத்தேர்தலில் தோல்வி அடைந்ததால் அதிர்ச்சி அடைந்த மம்தா பானர்ஜி, கோபத்தில் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை காங்கிரஸ் உடன் சேர்ந்து சந்திக்கப்போவது இல்லை என்று அறிவித்தார். தாங்கள் 2024ம் ஆண்டு தேர்தலை தனித்தே சந்திப்போம் என்று அறிவித்தார். இது எதிர்க்கட்சிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கூட்டணி அமையாது
இதேபோல் ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது. அதேபோல் தெலுங்கானா முதல்வர் கேசிஆரும் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைப்பதை விரும்பவில்லை. இதேபோல் ஆந்திராவிலும் ஜெகன் மோகன் ரெட்டி காங்கிரஸ் உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. இப்படி 5 மாநிலங்களில் ஆட்சி அதிகாரத்தில் உள்ள தலைவர்கள் காங்கிரஸ் உடன் கூட்டணியை விரும்பாத நிலையில் 3வது அணி உருவாகும் என்ற நிலையே உள்ளது.

ரகுபதி நம்பிக்கை
இந்நிலையில் தான், முதல்வர் ஸ்டாலின் நினைத்தால் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியையும், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியையும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியில் ஒன்று சேர்க்க முடியும் என்று அமைச்சர் ரகுபதி நம்பிக்கை தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் கூட்டம் ஒன்றில் பேசிய அமைச்சர் ரகுபதி 2009ம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணியில் தான் மம்தா பானர்ஜி இருந்தார். தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி இறுதியாகும் என்றும் கூறினார்.












Click it and Unblock the Notifications