1,260% சொத்து குவிப்பு- விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணியின் கூட்டாளி முருகானந்தம் எந்த நேரத்திலும் கைது?
புதுக்கோட்டை: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோரின் வலது கரமாக இருந்த புதுக்கோட்டை அரசு ஊழியர் முருகானந்தம் வருமானத்துக்கு அதிகமாக 1,260% சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப் பதிவு நடத்திய அதிரடி சோதனை 16 மணிநேரம் நடைபெற்றது. இதனையடுத்து புதுக்கோட்டை முருகானந்தம் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்கின்றன போலீஸ் வட்டாரங்கள்.
Recommended Video
புதுக்கோட்டையில் ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றி வருபவர் அரசு ஊழியர் முருகானந்தம் (வயது 47). புதுக்கோட்டை ஊராட்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிகிறார்.
முருகானந்தத்தின் மனைவி காந்திமதி (வயது 38) முள்ளங்குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவராக இருக்கிறார். கடந்த 2017-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை ரூ16 கோடிக்கு வீடு, மனை போன்ற பல சொத்துகளை இருவரும் வாங்கி குவித்ததாக புகார் எழுந்தது.

அதிரடி சோதனை
இதனடிப்படையில் முருகானந்தம் வீட்டில் நேற்று லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த அதிரடி சோதனை நேற்று காலை தொடங்கி 16 மணி நேரமாக நீடித்து நள்ளிரவில் நிறைவடைந்தது. புதுக்கோட்டையில் மூன்று இடங்களிலும் வெட்டன்விடுதி கிராமத்தில் மூன்று இடங்களிலும் என மொத்தம் ஆறு இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்றது. வெட்டன்விடுதி கிராமத்தில் நடைபெற்று வந்த சோதனை நேற்று மாலை முடிவடைந்தது. அந்த சோதனையில் பல முக்கியமான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

முருகானந்தன் குடும்பமே சிக்குகிறது
புதுக்கோட்டை கடுக்காக்காட்டில் முருகானந்தத்தின் சகோதரரும், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி விஜயபாஸ்கர் ஆகியோரின் தீவிர ஆதரவாளரும், உள்ளாட்சித் துறையில் டெண்டர்களை பெற்றவருமான பழனிவேலுக்கு சொந்தமான வீடு, வணிக வளாகம், இவர்களின் மற்றொரு சகோதரரான ரவிச்சந்திரனுக்கு சொந்தமான வீடு ஆகிய இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். புதுக்கோட்டையில் உள்ள முருகானந்தம் வீடு அலுவலகம் உள்ளிட்ட மூன்று இடங்களில் நடத்தப்பட்ட சோதனை 16 மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. நேற்று இரவு 11 மணி அளவில் அவரது வீட்டில் நடந்து வந்த சோதனை முடிவடைந்தது. இந்த சோதனையில் 83 பவுன் தங்க நகைகள், 3 கிலோ 700 கிராம் வெள்ளி பாத்திரங்கள், ரூ46,160 ரொக்கம் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்பிலான முக்கியமான ஆவணங்கள், சொகுசு கார்கள் கைப்பற்றப்பட்டன.

எந்த நேரத்திலும் கைது?
ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றும் முருகானந்தம் அவரது சகோதரர் பெயரில் அரசுக்கு ப்ளீச்சிங் பவுடர் உள்ளிட்டவற்றை சப்ளை செய்யும் டெண்டர்கள் எடுத்ததும் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் தமிழகம் முழுவதும் மின் விளக்குகள் பொருத்தும் பணிக்கான டெண்டர்களையும் முருகானந்தம் குடும்பத்தினர் பெற்றிருந்தனர். தற்போது அரசு ஊழியரான முருகானந்தம் மீது வருமானத்துக்கு அதிகமாக 126% சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து முருகானந்தம் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

மாஜிக்கள் மீது வழக்குகள்
ஏற்கனவே சட்டவிரோத குட்கா விற்பனைக்கு லஞ்சம் வாங்கிய வழக்கில் மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் சிக்கி இருக்கிறார். அதேபோல் பல ஆயிரம் கோடி ரூபாய் டெண்டர் முறைகேடுகளில் மாஜி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சிக்கி இருக்கிறார். சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கும் நிலுவையில் உள்ளது. எஸ்.பி.வேலுமணி, அவரது சகோதர் உள்ளிட்டோர் வீடுகளில் அண்மையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து அதிரடி சோதனை நடத்தி இருந்தனர். இந்த நிலையில் மாஜி அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வேலுமணியின் கூட்டாளியான முருகானந்தம் தற்போது குடும்பத்தோடு சிக்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications