7 வயது ஜெயப்பிரியா.. தொடையெல்லாம் காயம்.. இது நாடு தானா?.. கொதிக்கும் மக்கள்: #JusticeforJayapriya
7 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளனர்
புதுக்கோட்டை: ஜெயப்பிரியாவின் தொடை பகுதி முழுக்க காயங்கள் அதிகமாக இருந்ததாக சொல்லப்படுகிறது.. 7 வயது குழந்தையை மிக கொடுமையாக பலாத்காரம் செய்து, அடித்தும் கொன்றுள்ளனர்.. இது சம்பந்தமாக ஒருவர் கைது செய்யப்பட்டுவிட்டாலும், மற்றொருவருக்கும் தொடர்பு இருக்குமோ என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. இதனிடையே, #JusticeforJayapriya என்ற ஹேஷ்டேக்கில், இது என்ன நாடா? இல்லை காடா? என்று கேள்வி எழுப்பியதுடன், ஜெயப்பிரியாவின் மரணத்துக்கும் நியாயம் கேட்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ளது ஏம்பல் என்ற கிராமம்.. இங்கு வசித்து வந்த ஒரு தம்பதியரின் 7 வயது மகள் ஜெயப்பிரியா, வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தாள்
ஆனால் விளையாடி கொண்டிருந்தவளை திடீரென காணவில்லை.. இதை கவனித்த பெற்றோரும், பக்கத்திலேயே சொந்தக்காரர்கள் வீடு நிறைய உள்ளதால் அங்கு சென்றிருப்பாள் என்று நினைத்தனர்.

ஜெயப்பிரியா
ஆனால் இரவு நேரம் ஆகியும் வீட்டுக்கு திரும்பி வரவில்லை.. அதனால் பதறிபோன பெற்றோர், சொந்தக்காரர் வீடுகளுக்கு சென்று தேட ஆரம்பித்தனர்.. ஆனால் சிறுமி கிடைக்கவில்லை.. இதனால், ஏம்பல் போலீஸாரிடம் சிறுமியைக் காணவில்லை எனப் புகார் தந்தனர். அந்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து தேடிவந்தனர்.

கருவேல மரங்கள்
இதனிடையே, அவர்களின் வீட்டிற்கு அருகே உள்ள சிறுமியின் சடலம் கிடந்தது.. கருவேல மரங்கள் நிறைந்த கண்மாய் கரையில் கொடிகள் படர்ந்த இடத்தில் சிறுமி சடலம் பொதிந்து கிடந்தது.. உடல் முழுவதும் காயங்கள் இருந்தன. குறிப்பாக தொடைப்பகுதியில் நிறைய காயங்கள் இருந்ததாக சொல்கிறார்கள்.. சடலத்தை கைப்பற்றிய போலீஸார் போஸ்ட் மார்ட்டத்துக்கு புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மோப்பநாய்
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இருந்திருப்பாரோ என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை ஆரம்பமானது. மோப்பநாய் வரவழைக்கப்பட்டது.. அந்த நாய் கண்மாய் கரை பகுதியெல்லாம் சுற்றிவிட்டு, கடைசியாக ஒரு வீட்டின் முன்பு வந்து படுத்து கொண்டது.. அப்போதுதான் அந்த வீட்டில் உள்ள ராஜேஷ் என்பவரை பிடித்து விசாரித்தனர்.. அவருக்கு 29 வயது.

வாக்குமூலம்
விசாரணையில் ஜெயப்பிரியாவை தான்தான் பலாத்காரம் செய்ததாகவும், பிறகு அடித்து கொன்றுவிட்டதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதையடுத்து, ராஜேஷை போலீஸார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். மேலும், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், நடந்த இந்த கொடூரத்தில் மேலும் ஒருவருக்கு தொடர்பு இருக்கும் என்று சொல்லப்படுகிறது.. அதனால் இன்னொருத்தரையும் பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

ஹேஷ்டேக்
இதனிடையே, பொதுமக்கள் ஆவேசமாகிவிட்டனர்.. ஏற்கனவே கொரோனா ஒரு பக்கம் மிரட்டி வருகிறது.. இத்தனை நாள் ஆகியும் சாத்தான் குளத்தில் என்னதான் நடந்தது என்பது வெட்டவெளிச்சமாக தெரியாமல் உள்ளது.. இப்போது 7 வயது குழந்தையை இப்படி கதற கதற கூட்டு பலாத்காரம் செய்து, கொடூரமாக கொலையும் செய்துள்ளதை நினைத்து பதறி போய்உள்ளனர்.. #JusticeforJayapriya என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.. இது என்ன நாடா? காடா? என்றும் ஆவேசத்துடன் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

எப்படி மனசு வருது?
மேலும் "குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும், சிறு பிஞ்சு குழந்தைகளை வன்புணர்வு செய்ய படுபாவிகளுக்கு எப்படிதான் மனம் வருகிறதோ.. உங்கள என்னதான் பண்றது" என்று கேள்வி எழுந்து வருகிறது. "சோத்துச்சண்டை தீரவில்லை.. வீதிக்கொரு கட்சி உண்டு... சாதிக்கொரு சங்கம் உண்டு.. நீதி சொல்ல மட்டும் இங்க நாதி இல்லை.. சனம் நிம்மதியா வாழ ஒரு நாளுமில்லை இது நாடா இல்லை வெறும் காடா? இதைக்கேட்க யாருமில்லை தோழா!" என்றும் பதிவிட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications